இனவாத நாடகம் வாயிலாக ஆட்சியை தக்கவைக்கும் முயற்சி - சஜித் ஆதங்கம்
2019 ஆம் ஆண்டு ஆட்சியைக் கைப்பற்றுவதற்காக அரங்கேற்றப்பட்ட ‘இனவாத’ நாடகத்தின் 2ஆவது பாகத்தினை மேடையேற்றும் முயற்சிகள் இடம்பெற்று வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கூறினார்.
இப்படிப்பட்டவர்களுக்கு உரிய பாடத்தினை மக்கள் புகட்ட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
13ஆம் திருத்தச்சட்டம் என்றும், 13 பிளஸ் என்றும், போலியான வாக்குறுதிகளை அதிபர் கனவில் உள்ள சிலர், மக்களை ஏமாற்றுவதற்காக வழங்கி வருகின்றனர்.
தமது பதவிகளை தக்கவைத்துக்கொள்ளவும், அவர்களின் சுகபோக வாழ்க்கையை பேணிக்கொள்வதற்கும், இவ்வாறான பரப்புரைகள் வாயிலாக தொடர்ந்தும் மக்களை ஏமாற்றிக்கொண்டு உள்ளனர்.
2ஆம் பாகம் அரங்கேறி வருகிறது

இவ்வாறான உத்தியின் வாயிலாகத்தான் 2019 ஆம் ஆண்டும் ஆட்சி பிடிக்கப்பட்டது, இப்போது இந்த நாடகத்தின் 2ஆம் பாகம் அரங்கேறி வருகிறது என்றும் சஜித் சுட்டிக்காட்டினார்.
இதில் இனவாத ரீதியிலான பிரசாரங்கள் ஓர் அங்கமாகத் திகழ்கின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இனவாதம், மதவாதம் என்பவற்றைப் பரப்பி ஆட்சியை பிடித்தவர்கள் ஈற்றில் மக்களால் விரட்டியடிக்கப்பட்டுள்ளனர் என்பதை அனைவரும் நினைவில் வைத்து செயற்பட வேண்டியது முக்கியமான விடயம் என்றும் சஜித் கூறிமுடித்தார்.