நாளை ஜேர்மனிக்கு புறப்படவுள்ள ஜனாதிபதி அநுர
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) உத்தியோகபூர்வ விஜயமாக நாளை(10) இரவு ஜேர்மனிக்குப் பயணமாகின்றார்.
ஜேர்மனியின் ஜனாதிபதி பிராங்க்-வால்டர் ஸ்டெய்ன்மியரின் (Frank-Walter Steinmeier) அழைப்பின் பேரில் எதிர்வரும் 11ஆம் திகதி முதல் 13 ஆம் திகதி வரையில் ஜேர்மனியில் (Germany) பல்வேறு சந்திப்புக்களில் ஈடுபடவுள்ளார்.
இவ்விஜயத்தின் போது, ஜனாதிபதி அநுர அரசாங்க முன்னுரிமைகளின் அடிப்படையில் வர்த்தகம், இலத்திரனியல் பொருளாதாரம், முதலீடு மற்றும் தொழில் பயிற்சி வாய்ப்புகள் உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்புக்கான புதிய வழிகள் குறித்து ஆலோசிக்க ஜேர்மனியின் ஜனாதிபதி, முக்கிய அமைச்சர்கள் மற்றும் பிற பிரமுகர்களுடன் இருதரப்பு கலந்துரையாடல்களில் ஈடுபடுவார்.
விஜயத்தில் கலந்துகொள்ளவுள்ளோர்
இலங்கையின் பொருளாதார மாற்றம், உருவாகிவரும் முதலீட்டு வாய்ப்புக்கள், நாட்டின் வளர்ச்சித் திறன் மற்றும் இரு நாடுகளுக்கும் இடையில் புதிய வர்த்தக உறவுகளை உருவாக்குவதற்கான வாய்ப்புகள் ஆகியவற்றை எடுத்துக்காட்டும் வகையில், ஜேர்மனியில் உள்ள முக்கிய தொழிற்துறைகளுடன், ஜேர்மன் வர்த்தக மற்றும் தொழிற்துறை சபை (DIHK) ஏற்பாடு செய்யும் வணிக மன்றத்திற்கு ஜனாதிபதி அநுர தலைமை தாங்கவுள்ளார்.
மேலும், இவ்விஜயத்தின் போது அநுரகுமார திசாநாயக்க ஜேர்மனியின் சுற்றுலா மற்றும் பயணத்துறைசார் தொழிற்சங்கங்களை சந்திக்கவுள்ளார்.
இவ்விஜயத்தில், ஜனாதிபதியுடன் வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் (Vijitha Herath) மற்றும் சிரேஷ்ட அரச அதிகாரிகள் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

