அதிபர் தேர்தலைப் பிற்போட முடியாது : அநுரகுமார திசாநாயக்க
இலங்கையில் அடுத்த வருடம் கட்டாயம் அதிபர் தேர்தலை நடத்த வேண்டும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஊவா பரணகமவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
தேர்தல் பிரசாரத்தில் தோல்வி
“அதிபர் தேர்தலை பிற்போட்டு தேசிய மக்கள் சக்தியின் வளர்ச்சியை இடைநிறுத்த முடியும் என அதிபர் ரணில் விக்ரமசிங்க நினைத்தார்.

இன்று வரையில் தேர்தல் ஒன்று இல்லை, இலங்கை வரலாற்றில் இவ்வாறு தேர்தல் பிற்போடப்பட்ட சம்பவங்களை கண்டு இருக்கின்றீர்களா, ஏன் தேர்தல் நடத்தவில்லை.
தேர்தல் பிரசாரத்தில் அவர்களுக்கு படுதோல்வியும் தேசிய மக்கள் சக்திக்கு மிகப்பெரிய வெற்றியும் காணப்படுகின்றது.
ஆகவே ரணில் உள்ளிட்ட தரப்பினர் சட்டங்களை மீறி நீதிமன்ற தீர்ப்புகளை உடைத்தெறிந்து தேர்தல் ஆணையகத்தை அச்சுறுத்தி தேர்தலை நடத்தவிடாமல் செய்கின்றார்கள்.
தேசிய மட்ட தேர்தல்
இவ்வாறு தேர்தலை பிற்போட்டுக் கொண்டிருந்தாலும் அவர்கள் நெருக்கடிக்கு உள்ளாகும் சந்தர்ப்பம் ஒன்று வரும்.

நம் நாட்டின் அரசியலமைப்பு சட்டவாக்கத்திற்கு அமைவாக அதிபர் தேர்தலைப் பிற்போட முடியாது. அடுத்த வருடம் கட்டாயமாக அதிபர் தேர்தலை நடத்த வேண்டும்.
புதிய ஆட்சி ஒன்றை உருவாக்குவதற்கான தேசிய மட்ட தேர்தல் ஒன்றை விரைவில் காண்போம்” என அவர் மேலும் தெரிவித்தார்.