கிளிநொச்சியில் ஏழாவது நாளாகவும் தொடரும் போராட்டம்!
கிளிநொச்சி பூநகரி பொன்னாவெளி சீமெந்து தொழிற்சாலைக்கு எதிரான மக்கள் போராட்டம் இன்று(09) 07ஆவது நாளாகவும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
அனைத்து மக்கள் ஒன்றியத்தால் வேரவில், வலைப்பாடு, கிராஞ்சி ஆகிய கிராமங்கள் இணைந்து சீமெந்து தொழிற்சாலைக்கு எதிராக நடாத்தும் சுழற்சி முறையிலான கவனயீர்ப்பு போராட்டாத்தின் ஏழாவது நாள் போராட்டமானது வேரவில் வைத்தியசாலைக்கு அருகில் இடம்பெற்று வருகிறது.
பொன்னாவெளி எனும் பழமைவாய்ந்த கிராமத்தில் சீமெந்து தொழிற்சாலைக்கான சுண்ணக்ககல் அகழ்வை மேற்கொள்வதற்கு டோக்கியோ சீமெந்து நிறுவனம் ஆய்வுகளை மேற்கொண்டு பணிகளை முன்னெடுக்கவுள்ள நிலையில் பொதுமக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த வாரம் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர். அதன் தொடர்ச்சியாக சுழற்சி முறையிலான கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
பொதுமக்கள் பாதிக்கப்படும் நிலை

கடற்கரைக்கு அருகில் உள்ள கிராமங்களில் சுமார் 300 மீற்றர் வரையான ஆழத்தில் சுண்ணக்கல் அகழ்வு மேற்கொள்ளப்படும் போது அதன் விளைவாக தங்களது கிராமங்களுக்குள் கடல் நீர் உள்வரும் எனவும் அதனால் கிராம மக்கள் கிராமங்களை விட்டு வெளியேற வேண்டிய நிலைமை ஏற்படும் என்றும் தெரிவிக்கின்றனர்
அத்துடன் தொழிற்சாலைக் கழிவுகள் காரணமாக மோசமான நோய்த்தாக்கங்களுக்கும் பொதுமக்கள் முகம்கொடுக்க வேண்டிய சூழ்நிலைகள் உருவாகும் என்றும் தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக கடற்கரையில் அமைந்துள்ள தங்களது கிராமங்களில் சுண்ணக்கல்
அகழ்வு நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டாம் என தெரிவித்து
கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.