மூன்று மாத பிஞ்சுக் குழந்தையை கொன்று புதைத்தது ஏன்...! செம்மணியில் வெடித்த போராட்டம்
யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்திற்கு நீதி கோரி செம்மணி சந்தியில் இன்று (20) போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் செம்மணிப் பகுதியில் காலை 10.00 மணிக்கு இந்த போராட்டம் ஆரம்பமாகியுள்ளது.
செம்மணி சித்துப்பாத்தி மயானத்தில் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் தொடர்ச்சியாக மீட்கப்பட்டு வந்தன.
நீதி கோரிய போராட்டம்
இந்த நிலையில் இவை தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுக்க வேண்டுமென பலரும் வலியுறுத்தி வந்த நிலையில் செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கோரி இன்று மீண்டும் போராட்டம் இடம்பெறுகின்றது.
இதன்போது ”மூன்று மாதப் பிஞ்சு குழந்தையை மூச்சு அடக்க கொன்றுபுதைத்தது ஏன்?”, ”சித்துபாத்தியில் சிந்தப்பட்ட இரத்ததிற்கு நீதி எப்போது?”, ”காணாமல் போனவர்கள் நினைவாக செம்மணியில் நீதிக்காக நிற்கிறோம்”, ”பதுக்கப்பட்ட உண்மை வெளிக்கொண வேண்டும்" போன்ற வாசகங்கள் எழுதிய பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அத்துடன் போராட்டம் நடைபெறும் இடத்தில் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து கடமைகளுக்காகவும் செம்மணி புதைகுழியை பாதுகாக்கும் முகமாகவும் அதிகளவு காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இப் போராட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், சமூக செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
செம்மணி சித்துபாத்தி புதைகுழி அகழ்வில் மொத்தமாக 19 முழுமையான மனித என்பு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணி இம்மாதம் 26 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |






