மக்களின் பூர்வீக நிலங்களை விடுவிக்குமாறு கோரி மன்னாரில் வெடித்த போராட்டம்
தமது பூர்வீக நிலங்களை உடனடியாக உரிமையாளர்களிடம் ஒப்படைக்க வலியுறுத்தியும், நீண்ட காலமாக தமது பூர்வீக நிலங்களை மீட்டெடுப்பதற்காக தொடர்ந்து போராடி வரும் மக்களுக்கு ஒற்றுமையையும் ஆதரவையும் வெளிப்படுத்தியும் மன்னாரில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
காணி இழந்த மக்களின் குரல் ஏற்பாட்டில் மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் அனுசரணையில் இன்று (7) காலை 10 மணியளவில் மன்னார் நகர சுற்றுவட்டத்துக்கு முன்பாக குறித்த கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.
யாழ்ப்பாணம் - வலிகாமம் வடக்கு, முல்லைத்தீவு - கேப்பாப்புலவு மற்றும் மட்டக்களப்பு மயிலத்தமடு–மாதவனை பகுதிகளில் தமது பூர்வீக காணிகளை மீட்டெடுப்பதற்காக பல ஆண்டுகளாக போராடி வரும் மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
போராட்டத்தில் கலந்துகொண்டோர்
இந்தப் போராட்டத்தில் மன்னார் மாவட்டத்தில் படையினர் வசம் உள்ள காணிகளின் உரிமையாளர்களும், கிராம மக்கள், மக்கள் அமைப்புகள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் என வடக்கின் சில பகுதிகளில் இருந்து கலந்து கொண்டிருந்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் "நிலம் எங்கள் உரிமை - நீதி எங்கள் இலக்கு!", "எமது காணி – எமது உரிமை!", "காணி உரிமை ஒரு மனித உரிமையாகும்!", "காணியே எமது வாழ்க்கையும் அடையாளமும்!", "எமது காணி – எமது குரல்!", "மக்கள் பசியால் தவிக்கையில் மக்களின் காணிகளில் படைகள் பயிரிடுவதா?", "வலிகாமம் வடக்கு மக்களின் காணி அபகரிப்பிற்கான உயர்பாதுகாப்பு வலயத்தை எப்போது நீக்குவீர்கள்?", "வலிகாமம் வடக்கு மக்களின் நில மீட்பு போராட்டத்திற்கு மன்னார் மக்களின் ஆதரவு!", "முல்லைத்தீவு கேப்பாப்புலவு மக்களின் காணி விடுவிப்பு போராட்டத்திற்கு மன்னார் மக்களின் ஆதரவு!", "மட்டக்களப்பு மயிலத்தமடு–மாதவனை மக்களின் நீண்டகால நில உரிமைப் போராட்டத்திற்கு மன்னார் மக்களின் ஆதரவு!", "இலங்கை அரசே! பூர்வீக காணிகளை உடனடியாக உரிய மக்களிடம் ஒப்படையுங்கள்!" என்ற வாசகங்கள் எழுதிய பதாகைகளை ஈந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகள் - நயன், கஜிந்தன்
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

