எழுச்சிப் பேரணி இன்று மன்னார் நோக்கி பயணம் - பெருந்திரளானோர் ஆதரவு
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான, தமிழினத்திற்கு நீதி கோரிய பேரெழுச்சிப் பேரணி தற்போது வவுனியா நகரை வந்தடைந்துள்ளது.
நேற்றுக் காலை, திருகோணமலையில் இருந்து ஆரம்பமான குறித்த பேரணி பல்வேறு இடையூறுகளுக்கு மத்தியில் முல்லைத்தீவிற்கு சென்று தற்போது வவுனியாவிற்கு வந்துள்ளது.
கடந்த 3ஆம் திகதி அம்பாறை பொத்துவிலில் ஆரம்பமான பேரணி மட்டக்களப்பு வழியாக திருகோணமலை, முல்லைத்தீவு பகுதிகளுக்குச் சென்று தற்போது பலத்த ஆதரவுகளுடன் வவுனியா நகரைச் வந்தடைந்துள்ளது.
இன்று இப்பேரணி மன்னார் நோக்கி நகரவுள்ளது.
வடக்கு, கிழக்கில் நடைபெறும் பௌத்த மயமாக்கல், தமிழர்களின் நிலங்கள் அபகரிப்பு, அரசியல் கைதிகளை விடுதலை செய்தல், காணாமல் ஆக்கப்பட்டோர் விடயம், மலையக மக்களின் ஆயிரம் ரூபாய் சம்பளம், முஸ்லிம்களின் உடல்கள் தகனம் உள்ளிட்ட அரச அடக்குமுறைகள் போன்ற விடயங்களை முன்னிறுத்தியும், அவற்றைக் கண்டித்தும், நீதி கோரியும், தீர்வு கேட்டும் இந்த போராட்டம் தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.