தமிழ்தேசிய கட்சிகளுக்கு ஏற்படப்போகும் நிலை : எச்சரிக்கும் எம்.பி
வடக்கு, கிழக்கு மாகாணசபை மாற்று கட்சிகளின் அதிகாரங்களுக்குள் செல்கின்ற வாய்ப்பு ஏற்படும் பட்சத்தில் தமிழ் தேசியத்தை பற்றி பேசுகின்ற தமிழ் கட்சிகள் அத்தோடு கடையை மூடிவிட்டு செல்லும் நிலை ஏற்படும் என வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
வவுனியாவில் அமைந்துள்ள தமிழீழ விடுதலை இயக்கத்தின் அலுவலகத்தில் இன்று(20) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது இவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்,
மாகாண சபை தேர்தலும் இந்தியாவும்
மாகாணசபை தேர்தலை நடாத்த வேண்டும் என்று எல்லோரும் கோரிக்கை விடுக்கின்ற இச்சந்தர்ப்பத்திலே அதிகார பரவலாக்கலின் ஊடாக மாகாண சபை தேர்தலை நடாத்த வேண்டும் என்று இந்தியாவும் ஐ.நா சபையிலே கோரிக்கையினை முன்வைத்துள்ளது. இதேவேளை மாகாணசபை தேர்தல் நடைபெறும் என்றால் எல்லா கட்சிகளும் ஒன்றிணைந்து குறித்த தேர்தலில் பங்குகொள்ள வேண்டும் என்று இந்திய தூதுவரும் கோரிக்கையினை முன்வைத்துள்ளார்.
குறித்த விடயமானது ஒரு நியாயமான விடயமாக நான் பார்க்கின்றேன். எங்களை பொறுத்த வரையிலே ஒற்றுமை இல்லாமை என்பதனை கடந்த நாடாளுமன்ற தேர்தலிலே நாங்கள் அனுபவித்திருந்தோம். குறிப்பாக எமது ஒற்றுமை இன்மை என்பதன் காரணமாக தமிழ் மக்கள் விரக்தியுடன் இருப்பதுடன் ஒற்றுமையான சூழலை எதிர்பார்த்து இருக்கின்றனர். இதன் காரணமாகவே மக்கள் யாருக்கு வாக்கு போடுவது என்ற குழப்பத்தில் இருந்தனர். மேலும் இவ் ஒற்றுமை இன்மையினாலேயே புதிய நபரை புதிய அரசை தெரிவு செய்ய வேண்டும் என்ற ரீதியிலேயே நாடாளுமன்ற தேர்தலிலே மக்கள் வாக்களித்திருந்தனர்.
இதன் காராணமாகவே முன் எப்போதும் இல்லாத வகையிலே வடக்கு கிழக்கு பகுதிகளில் தேசிய கட்சிகளின் பிரநிதிதித்துவம் உருவாகியது. இது ஒரு செய்தியாகவே நாம் பார்க்க வேண்டும்.
கடையை மூடிவிட்டு செல்லும் நிலை ஏற்படும்
குறிப்பாக எமது செயற்பாடுகள் வெறுமனவே பேச்சளவில் காணப்படுமேயானால் எமது மாகாணசபை நிச்சயமாக மாற்று கட்சிகளின் அதிகாரங்களுக்குள் செல்கின்ற வாய்ப்பு ஏற்படும் பட்சத்தில் தமிழ் தேசியத்தை பற்றி பேசுகின்ற தமிழ் கட்சிகள் அத்தோடு கடையை மூடிவிட்டு செல்லும் நிலை ஏற்படும்.
எங்களுடைய மக்களுடைய எதிர்காலம், இனப்பிரச்சினை, எமது மண் பறிபோகாமல் இருக்க வேண்டும் என்றால் அதற்காக போராட வேண்டும். எனவே அதற்கு நாங்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதே எனது கோரிக்கையாக இருக்கின்றது.
அதற்காக நாங்கள் தொடர்ந்தும் உழைத்து வருகின்றோம் என்றாலும் அதற்கான சந்தர்ப்பம் எட்டப்படவில்லை.
ஐ.நாவிற்கு கடிதம் எழுதும் போதோ அல்லது ஐநாவிற்கு கையொப்பம் இடுகின்ற சந்தர்ப்பத்தின் போதோ ஒற்றுமையாக இருக்கின்ற தமிழ் கட்சிகள், தேர்தல் காலத்தில் மாத்திரம் ஒற்றுமையாக இருக்காமல் பிரிந்து செல்கின்ற அபாய நிலை இருக்கின்றது. எனவே ஒற்றுமையாக மக்களுடைய எதிர்பார்ப்பை நிறைவு செய்கின்ற கட்சிகளாக இருக்க வேண்டும்.
தமிழ் அரசு கட்சியுடன் பேச்சுவார்த்தை நடாத்த தயார்
என்னைப்பொறுத்த வரையிலே எல்லோரும் ஒன்றிணைந்து செயற்படுகின்ற சூழலை எதிர்பார்க்கின்றோம். தமிழ் தேசியத்தினை நேசிக்கின்ற கட்சிகளினை ஒற்றுமைப்படுத்துதல் என்ற ரீதியில் நிச்சயமாக தமிழ் அரசு கட்சியுடன் பேச்சுவார்த்தை நடாத்துவதற்கு தயாராக இருக்கின்றோம். குறிப்பாக இம்மாகாணசபையிலே அவர்களையும் இணைத்துக்கொண்டு பயணிப்பது என்பதுதான் சாலச்சிறந்ததாகும்.
ஒவ்வொரு வருடமும் நாடாளுமன்றத்தில் சொத்து விபரம் ஒப்படைக்கப்பட வேண்டும். அந்த அடிப்படையில் நான் எனது சொத்து விபரத்தினை வழங்கி வருகின்றேன். ஒவ்வொரு வருடமும் சொத்து விபரங்கள் நாடாளுமன்றத்திற்கு வழங்காத பட்சத்தில் நீதிமன்றத்திற்கு செல்கின்ற நிலை ஏற்படும். எனவே நாம் ஒவ்வொரு வருடமும் வழங்கி வருகின்ற போதும் அது வெளிப்படைத் தன்மையை ஏற்படுத்துகின்ற நிலையினை ஏற்படுத்தப்படவில்லை. எனவே இனி வரும் காலங்களிலே எனது சொத்து விபரங்கள் வெளிப்படைத்தன்மையில் வெளியிடப்படும் என நம்புகின்றேன்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
