தோல்வியை மறைக்கவா பாதாள உலகக்குழு? புபுது ஜயகொட கேள்விக் கணை
அரசாங்கம் ஏனைய விடயங்களில் அடைந்திருக்கும் தோல்வியை மறைப்பதற்காகவே பாதாள உலகக்குழுக்கள் தொடர்பில் பேசுபொருளை உருவாக்குகின்றதா என்ற சந்தேகம் எழுகின்றதென முன்னிலை சோசலிஸக் கட்சியின் செயலாளர் புபுது ஜயகொட கேள்வி எழுப்பியுள்ளார்.
கொழும்பில் நேற்று முன்தினம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
முன்னர் அனைத்து விடயங்களுக்கும் விடுதலைப்புலிகளே எதிரிகளாக சித்தரிக்கப்பட்டனர். அதன்பின்னர் புதிய எதிரியாக இஸ்லாமிய அடிப்படைவாதம் காண்பிக்கப்பட்டது. பின்னர் அரச சார்பற்ற அமைப்புக்களும் எதிரிகளாக்கப்பட்டன.
தற்போது அரசாங்கம் ஏனைய விடயங்களில் அடைந்திருக்கும் தோல்வியை மறைப்பதற்காகவே பாதாள உலகக்குழுக்கள் தொடர்பில் பேசுபொருளை உருவாக்குகின்றதா என்ற சந்தேகம் எழுகின்றது.
அத்தோடு கொரோனா வைரஸ் பரவலினால் மக்கள் அச்சத்திற்குள்ளாகியிருக்கும் சந்தர்ப்பத்தில், சட்டவிரோதமான நடவடிக்கைகளை அரசாங்கம் சாதாரணமாக முன்னெடுப்பதற்கு முயற்சிக்கின்றதா என்ற கேள்வியும் ஏற்படுகின்றது.
இதேவேளை, பாதாள உலகக்குழுச் செயற்பாடுகளில் முக்கியமாக இயங்கும் அரசியல்வாதிகள், வர்த்தகர்களின் அடையாளங்கள் மற்றும் அவர்கள் தொடர்பான சாட்சியங்களை மறைப்பதற்காக பாதாள உலகக்குழு உறுப்பினர்கள் கொல்லப்படுகின்றனரா என புபுது ஜயகொட கேள்வி எழுப்பியுள்ளார்.