மின்சார கட்டண திருத்தம் தொடர்பில் வெளியான தகவல்
இலங்கை (Sri Lanka) பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு, 2025 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதிக்கான மின்சாரக் கட்டண திருத்தம் இந்த வார இறுதிக்கு முன்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.
இலங்கை மின்சார சபை முன்வைத்த முன்மொழிவு தொடர்பாக பொதுமக்களின் கருத்துக்களைப் பெற்ற பின்னர், அதன் மீளாய்வு நடவடிக்கைகள் தற்போது இறுதிக் கட்டத்தில் உள்ளதாக பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு பிரிவின் பணிப்பாளர் ஜயநாத் ஹேரத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், "2025 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதிக்காக இலங்கை மின்சார சபை முன்வைத்த மின்சாரக் கட்டண திருத்த முன்மொழிவு, அதாவது 18.3% உயர்வு முன்மொழிவு தொடர்பாக பொதுமக்கள் ஆலோசனை செயல்முறை நடைபெற்றது.
மின்சார சபை மறுசீரமைப்பு
அந்த ஆலோசனை செயல்முறையின்போது பொதுமக்களால் வழங்கப்பட்ட எழுத்து மற்றும் வாய்மொழி கருத்துக்கள், முன்மொழிவுகள் ஆய்வு செய்யப்பட்டு, அது இறுதிக் கட்டத்தில் உள்ளது.
அத்துடன், முன்மொழிவு கட்டண முறைமையுடனான இணக்கத்தன்மை குறித்த மீளாய்வு நடவடிக்கைகளும் இறுதிக் கட்டத்தில் உள்ளன.
எனவே, பெரும்பாலும் இந்த வாரத்திற்குள், அடுத்த பாதிக்கு செயல்படுத்தப்படவுள்ள மின்சாரக் கட்டணங்கள் எவை, அவை எப்போது செயல்படுத்தப்படும் என்பது குறித்த இறுதி முடிவை அறிவிக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. இந்த வாரத்திற்குள் பெரும்பாலும் இதன் இறுதி முடிவை அறிவிக்க முடியும்."
இதற்கிடையில், மின்சார சபையை மறுசீரமைப்பதற்காக கொண்டுவரப்பட்ட முன்மொழிவின் மூலம், அரசாங்கம் மின்சார சபையை தனியார் மயமாக்குவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக ஒருங்கிணைந்த மின்சார ஊழியர் சங்கம் தெரிவிக்கிறது.
அதன் செயலாளர் எல்.பி.கே. குமாமுல்ல, கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு, மின்சார சபையை ஆறு தனியார் நிறுவனங்களுக்கு விற்பனை செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகக் கூறினார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
