வடக்கு இந்தியாவுக்கு கிழக்கு சீனாவுக்கு!
இனப்பிரச்சினை தீர்வு விடயத்தில் அதிகாரப் பகிர்வு வழங்கப்படுமாக இருந்தால் சிறிலங்கா அரசு வடக்கு மாகாண அதிகாரத்தை தமிழர்களுக்கும் கிழக்கு மாகாண அதிகாரத்தை முஸ்லீம்களுக்கும் வழங்குவதற்கே தயாராகி வருவதாக கூறப்படுகிறது.
அதாவது வடக்கு இந்தியாவுக்கு கிழக்கு சீனாவுக்கு என்பதே அதன் அர்த்தமாக உள்ளது. சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க இனப்பிரச்சினைத் தீர்வு சம்பந்தமாக பேசும் போது மிக தெளிவாக "வடக்கு மக்களுக்கான அரசியல் தீர்வை வழங்க தயார்" என அடிக்கடி கூறிவருகிறார்.
உண்மையில் இதன் ஊடாக சிறிலங்கா அரசு பிராந்திய நாடுகளை கையாள்வதற்கு தயாராகி வருகிறது. மிக முக்கியமாக இந்திய இலங்கை ஒப்பந்தம் ஊடாக உருவாக்கப்பட்ட 13 வது திருத்தச் சட்டத்தை கூட நடைமுறைப்படுத்த சிறிலங்கா அரசு தயாராக இல்லை.
சிறிலங்கா அரசு இனப்பிரச்சினைத் தீர்வு விடயத்தில் கூட இந்தியா, சீனா, அமெரிக்கா, பாகிஸ்தான் நாடுகளை திருப்திப்படுத்தவே முனைகிறது. அதாவது இந்தியாவை முழுமையாக நம்புவதற்கு சிறிலங்கா சிங்கள அரசு தயாராக இல்லை. அதேவேளை இந்தியாவை நேரடியாக எதிர்க்கவும் தயாராக இல்லை.
சீனா - இந்தியா மோதும் களமாக மாறப் போகும் வடகிழக்கு?
இவ்வாறான சூழ்நிலையில் வடகிழக்கு மாகாணங்களை சீனா இந்தியா மோதும் களமாக மாற்றுவதற்கான தந்துரோபாய நடவடிக்கைகளில் சிறிலங்கா அரசு ஈடுபட்டு வருகிறது. 2009 ம் ஆண்டிற்கு முன்னர் இந்தியா, சீனா,பாகிஸ்தான், அமெரிக்கா, மேற்குலக நாடுகளை விடுதலைப்புலிகளுடனான யுத்தத்தை காரணம் காட்டி ஒரு புள்ளியில் இணைத்து இலங்கை தமிழர்களின் போராட்டத்தை அழித்தொழித்த சிறிலங்கா அரசு தற்போது சீனா, இந்தியா, பாகிஸ்தான் இடையிலான முரண்பாடுகளை பயன்படுத்தி தமிழர்களின் அரசியல் தீர்வு மற்றும் அதிகாரப் பகிர்வை பலவீனப்படுத்துவதற்கு தயாராகி வருகிறது.
இனப்பிரச்சினை தீர்வுக்கு மாவட்ட சபைகளை வழங்கத்தயார் என அதிபர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ள நிலையில் அவர் மாகாண சபைக்கான அதிகாரங்களை குறைப்பதற்கும் இந்தியாவின் 13 வது திருத்தச் சட்டத்தை இல்லாமல் செய்யவதற்காகவே மாவட்ட சபைகளுக்கு அதிகாரங்களை வழங்க முடியும் என்று கூறியுள்ளார்.
யுத்தம் நடைபெற்ற காலத்தில் இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட வடகிழக்கு மாகாணங்களின் இணைப்பை துண்டித்தவர்கள் கிழக்கு மாகாணத்தில் முஸ்லீம் அரசியல் தலைவர்களுக்கே கூடிய அதிகாரங்களை, அமைச்சுப் பதவிகளை வழங்கி கிழக்கில் உள்ள தமிழர்களை பலவீனப்படுத்தி வந்ததோடு கிழக்கில் தமிழர்களின் இன விகிதாசாரம் உட்பட அபிவிருத்தி திட்டங்கள், அரச உயர் பதவிகள் என அனைத்திலும் முஸ்லீம்களின் ஆதிக்கமே அதிகரித்திருந்தது.
கிழக்கை ஒரு இஸ்லாமிய தேசமாக அடையாளப்படுத்தி ஜிகாத் போதனைகள் ஊடான பல இஸ்லாமிய மதவாத, தீவிரவாத போக்கை உடைய முஸ்லீம் சமூகத்தை வளர்த்தும் விட்டிருந்தனர். இவ்வாறான சூழ்நிலைகளுக்கு காரணம் கிழக்கு மாகாணத்தை பாகிஸ்தான் போன்ற இஸ்லாமிய நாடுகள் ஊடாக கையாண்டு வரும் சீனா கிழக்கை இந்தியாவுக்கு எதிரான பகுதியாக மாற்றுவதில் முன் நின்று செயற்பட்டு வருகிறது.
இதற்காக பல இரகசிய திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது. இலங்கை இனப் பிரச்சினைக்கான தீர்வு மட்டும் அல்ல இலங்கையில் அரசியல் ரீதியான அதிகாரங்களையும் கைப்பற்றுவதற்கு இந்தியாவுக்கு போட்டியாக சீனா மிக மதிநுட்பத்துடன் நீண்ட காலமாக செயற்பட்டு வந்துள்ளது. இதற்கு சிறிலங்கா அரசு தனது பூரண ஆதரவை வழங்கி வந்துள்ளது என்பதுதே உண்மை.
இஸ்லாமிய தமிழர்களை பலி கொடுக்க போகிறதா?
இலங்கையின் இனப்பிரச்சினை தீர்வு விடயத்தில் தமிழ் முஸ்லீம் அரசியல் தலைவர்கள் ஒன்றுபட்டு செயல்படுவதாக கூறினாலும் வடகிழக்கு இணைந்த மாகாணத்திற்குள் அதிகாரங்களை பகிர்வதற்கு முஸ்லீம் தரப்புகள் தயாராக இல்லை. கிழக்கில் உள்ள இஸ்லாமிய மதவாத சக்திகள் கிழக்கு மாகாணம் முஸ்லீம்களுக்கானது என்ற கோரிக்கையை முன்வைத்து வருகின்றனர்.
வடக்கு மாகாணத்துடன் கிழக்கு மாகாணத்தை இணைக்க கூடாது என்று கோரும் முஸ்லீம் அரசியல் தலைவர்கள் கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியில் தொடர்ந்தும் முஸ்லீம் ஒருவரே இருக்க வேண்டும் என கூறிவருகின்றனர். இன் நிலையில் தமிழ் மக்களின் கோரிக்கையாக உள்ள சமஸ்டி தீர்வு மட்டும் அல்ல இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் ஊடாக உருவாக்கப்பட்ட 13 வது திருத்தச் சட்டத்தை கூட நடைமுறைப்படுத்த முடியாத சூழ்நிலையை மிகவும் திட்டமிட்டு சீனா பாகிஸ்தான் சிறிலங்கா அரசுகள் இணைந்து உருவாக்கி உள்ளனர்.
இந்தியாவை நேரடியாக எதிர்க்க முடியாத சிறிலங்கா அரசு சீனா பாகிஸ்தான் நாடுகளுக்கு ஊடாக கிழக்கு முஸ்லீம்களை இந்தியாவுக்கு எதிராகவும் பயன்படுத்த திட்டமிடுகிறார்களா? என்ற கேள்வி எழுகிறது.
கிழக்கு முஸ்லீம்களை தூண்டி விடுவது யார்?
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முன்னர் கிழக்கில் செயற்பாட்டில் இருந்த மதவாத, தீவிரவாத ஜிகாத் சிந்தனை கொண்ட அமைப்புக்கள் மற்றும் அதன் தலைவர்கள் மீளவும் செயற்படத் தொடங்கியுள்ளனர். ஆயுதப் பயிற்சி பெற்ற, இஸ்லாமிய தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட பலர் விடுதலை செய்யப்பட்டு அவர்களின் செயற்பாடுகள் ஊக்குவிக்கப்படுகிறது.
இஸ்லாமிய மதவாத அமைப்புக்கள் பல முஸ்லீம் அரசியல் தலைவர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறான சூழ்நிலையில் வடகிழக்கு இணைந்த அதிகாரப் பகிர்வுக்கு எதிராக இஸ்லாமிய மக்களை தூண்டி விட்டு இந்திய இலங்கை ஒப்பந்தம் ஊடாக உருவாக்கப்பட்ட 13 வது திருத்தச் சட்டத்தை இல்லாமல் செய்ய முடியும் என சீனா பாகிஸ்தான் நாடுகள் கருதுகின்றன.
கிழக்கை தனி மாகாணமாக வைத்திருப்பதன் ஊடாக கிழக்கு மாகாண ஆட்சியை சிங்கள, முஸ்லீம் தலைவர்களின் பெரும்பான்மையோடு ஆட்சி செய்ய முடியும் என இலங்கை சீனா பாகிஸ்தான் முகவர்கள் கருதுகின்றனர். இலங்கையின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த கிழக்கு மாகாணத்தின் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவதோடு கிழக்கு மாகாணத்தில் பாகிஸ்தானின் ஆதரவு பெற்ற அரசியல் தலைவர்கள் ஊடாக சீனா பாகிஸ்தான் நாடுகள் தங்களது அபிவிருத்தி மற்றும் பிராந்திய நலத் திட்டங்களுக்காக பயன்படுத்த முடியும் என கருதுகின்றனர்.
இந்தியா தனது 13வது திருத்தச் சட்டத்தை சிறிலங்கா மீது திணித்ததால் அதற்கு எதிராக கிழக்கு மாகாண முஸ்லீம்களை தூண்டி விட்டு கிழக்கில் வன்முறைகளை உருவாக்குவதற்கும் திரைமறைவில் சதித்திட்டங்களை உருவாக்க சீனா பாகிஸ்தான் தரப்புகள் தயாராகவே உள்ளதாக கூறப்படுகிறது. அதாவது கிழக்கு மாகாணத்தை ஒரு காஷ்மீர் போன்று மாற்றுவதற்கும் அதன் ஊடாக கிழக்கில் தமிழர்களின் இருப்பை இல்லது செய்வது அதன் ஊடாக கிழக்கில் இருந்து இந்தியாவையும் இந்தியாவுக்கான ஆதரவு தளத்தையும் இல்லாமல் செய்ய முடியும் என சீனா கருதுகிறது.
இதனால் கிழக்கில் அப்பாவி இஸ்லாமிய இளைஞர்களை மதவாத, ஜிகாத் போதனைகள் ஊடாக வன்முறையாளர்களாக மாற்றுவதற்கு சர்வதேச இஸ்லாமிய தீவிரவாத, மதவாத அமைப்புகளை சீனா பாகிஸ்தான் தரப்புகள் பயன்படுத்த கூடும் என்ற சந்தேகங்களும் எழுகிறது. அதாவது இந்தியாவுக்கு எதிரான தளத்தை இலங்கையின் கிழக்கு பகுதியில் நிரந்தரமாக உருவாக்கி இந்தியாவின் தமிழகம் உள்ளிட்ட பகுதிகளுக்கு அச்சுறுத்தல் விடுப்பதற்கும், தமிழகம் ஊடாக இந்தியாவுக்குள் ஊடுருவல் செய்வதற்கு வாய்ப்பாக இலங்கையின் கிழக்கு கடல் பரப்பை பயன்படுத்த சீனா பாகிஸ்தான் நாடுகள் திட்டமிடுகின்றன.
இதற்காக அப்பாவி இஸ்லாமியர்களை மதத்தின் பெயரால் பலி கொடுக்க பல மதவாத அமைப்புகளுக்கு வெளிநாடுகளில் இருந்து நிதி உதவிகள் வழங்கப்படுகிறது. எனவே இலங்கை கிழக்கு மாகாணத்தில் எதிர்வரும் காலங்களில் அரசியல் ரீதியான முரண்பாடுகளும், இன, மத ரீதியான முரண்பாடுகளையும் தூண்டி விட்டு தமிழ், முஸ்லீம் மக்களுக்கு இடையிலான வன்முறைகளை உருவாக்கி இனப்பிரச்சினை தீர்வில் குழப்பங்களை உருவாக்கலாம் எனவும் அதன் ஊடாக இந்தியாவின் 13 வது திருத்தச் சட்டத்தை இல்லாமல் செய்து இந்தியாவின் பிராந்திய பகுதிகளுக்கு அச்சுறுத்தல் விடுக்க முடியும் என சீனா பாகிஸ்தான் தரப்புகள் கருதுகின்றன.
இது குறித்து தமிழ், முஸ்லீம் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதோடு யாருடைய தூண்டுதல்களுக்கும் ஆளாகாது தமிழ் முஸ்லீம் சமூகங்கள் ஒன்றுபட்டு செயற்படுவதோடு தங்களுக்கு இடையிலான அதிகாரப் பகிர்வு உள்ளிட்ட அரசியல் முரண்பாடுகளை பேசி தீர்த்துக் கொள்வதே எதிர்கால சமூகத்தின் இருப்புக்கு பாதுகாப்பாக அமையும்.