பணிப்புறக்கணிப்பில் தொடருந்து ஊழியர்கள்! நாளை 2 மடங்காக சேவை முடங்கும் என எச்சரிக்கை
தொடருந்து போக்குவரத்து சேவையாளர்களில் சிலர் இன்று மாலை முதல் பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்துள்ளனர்.
தொடருந்து திணைக்களம் முறையற்ற வகையில் சேவையாளர்களுக்கு எரிபொருளை விநியோகிப்பதாக குற்றம் சுமத்தி இந்த பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்துள்ளனர்.
பணியாளர்கள் முன்னெடுத்துள்ள ஆர்ப்பாட்டம் காரணமாக இன்று மாலை இடம்பெறவிருந்த அலுவலக தொடருந்து சேவைகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கம் விடுத்த எச்சரிக்கை
இதேவேளை, கொழும்பு – கோட்டை மற்றும் மருதானை தொடருந்து நிலையங்களின் அதிபர்கள் கடமைகளில் இருந்து விலகியுள்ளனர்.
தங்களுக்கு ஏற்பட்டுள்ள பாதுகாப்பு தொடர்பான பிரச்சினை காரணமாக, அவர்கள் கடமைகளிலிருந்து விலகியுள்ளதாக தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரட்ன தெரிவித்துள்ளார்.
உரிய வேலைத்திட்டம் தயாரிக்கப்படாவிட்டால் நாளைய தினத்தில் 2 மடங்காக தொடருந்து சேவைகள் முடங்கக் கூடும்.
இதனால் அரச இயந்திரம் ஸ்தம்பிக்கும் நிலை ஏற்படும் என தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரட்ன முன்னெச்சரிக்கை விடுத்துள்ளார்.