விடுதலைப்புலிகள் அமைப்பின் பணத்தை இலக்குவைத்த ராஜபக்சர்கள்! பொன்சேகா வெளிப்படை
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் பணத்தை மலேசியா போன்ற நாடுகளில் வணிகங்களைத் தொடங்க ராஜபக்ச குடும்ப உறுப்பினர்கள் பயன்படுத்தியமை குறித்த குற்றச்சாட்டுக்கள் இன்றும் தொடர்கின்றன என ஃபீல்ட் மார்ஷல் சரத் ஃபொன்சேகா சுட்டிக்காட்டியுள்ளார்.
விடுதலைப் புலிகள் அமைப்பின் சர்வதேச வலையமைப்பை வழிநடத்திய 'கே.பி.' என்ற நபர் கைது செய்யப்பட்ட பிறகு, அந்த அமைப்பின் பணத்திற்கும் கப்பல்களுக்கும் எதுவும் நடக்கவில்லை என்று பல கருத்துக்களை இந்த தரப்பினர் முன்வைத்தனர் எனவும் கூறியுள்ளார்.
தென்னிலங்கை ஊடக நிகழ்ச்சியொன்றில் கலந்துக்கொண்டு மேற்கண்ட கருத்துக்களை வெளியிட்ட அவர் தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
சர்ச்சைக்குரிய நடவடிக்கை
முன்னாள் உளவுத்துறைத் தலைவர் சுரேஷ் சலே மேற்கொண்டதாகக் கூறப்படும் சில சர்ச்சைக்குரிய நடவடிக்கைகள், முற்றிலும் அரசியல் நலன்களுக்காகவே மேற்கொள்ளப்பட்டன என்பது ஆதாரங்களுடன் தெரியவந்துள்ளது.

இந்த நடவடிக்கையின் ஒட்டுமொத்த ஒருங்கிணைப்பை சுரேஷ் சலே மேற்கொண்டிருந்தபோதிலும், இதன் உண்மையான சூத்திரதாரியும் திட்டமிடுபவரும் அப்போதைய பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவே.
மேலும், தனது ஒப்புதலும் நேரடி அறிவும் இல்லாமல் சுரேஷ் சலே எந்தவொரு தீர்க்கமான நடவடிக்கையையும் யுத்தகாலத்தில் அவர் எடுக்கவில்லை.
சுரேஷ் சலே என்ற அதிகாரி எந்தப் பொறுப்பான பதவியையும் வகிக்கவில்லை. அவர் ஓர் அலுவலகத்தில் அறிக்கைகளைத் தயாரிக்கும் பணியில் மட்டுமே ஈடுபட்டிருந்தார். தமிழ் மொழியைக் கையாளும் திறன் மற்றும் ஆங்கிலத்தில் அறிக்கைகளை எழுதும் ஆற்றல் ஆகியவற்றின் காரணமாக, அவர் கொழும்பில் ஒரு ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்ந்தார்.
இதன் மூலம், அக்காலத்தில் புலனாய்வுத் துறையின் தலைவராக இருந்த ஹெண்டவிதாரனவின் கீழ் இருந்த உயர் அதிகாரிகளை அவர் மகிழ்வித்தார். தான் அவரை செயல்பாட்டு இராணுவப் பதவிகளிலிருந்து நீக்கியபோதிலும், கோட்டாபய ராஜபக்ச பின்னர் அவரரை பாதுகாப்பு அமைச்சகத்தில் உள்ள தனது தனிப்பட்ட தலைமையகத்துடன் இணைத்துக்கொண்டார்.
கருத்துச் சுதந்திரத்தின் கழுத்தை நெரிக்கும் PTA... அரசின் சட்ட அறியாமையைச் சபையில் அம்பலப்படுத்திய கஜேந்திரகுமார்
இராணுவப் புலனாய்வுத் துறை
அக்காலத்தில் இராணுவப் புலனாய்வுத் துறை மிகவும் பலவீனமாக இருந்ததுடன், விடுதலைப் புலிகளின் அமைப்பின் பலம் குறித்துப் பாதுகாப்புச் சபைக்குத் தவறான தரவுகளைச் சமர்ப்பித்தது.
புலனாய்வுத் துறை ஒன்பதாயிரம் விடுதலைப் புலிகள் உறுப்பினர்கள் மட்டுமே இருப்பதாகப் பொய்யான அறிக்கைகளை வழங்கியபோதிலும், சரத் பொன்சேகாவின் போர்க்கள ஆய்வுகளின்படி, அந்த எண்ணிக்கை முப்பதாயிரத்திற்கும் அதிகமாகும். ஹெண்டவிதாரன மற்றும் சலே போன்ற அதிகாரிகள் நான்காவது ஈழப் போருக்கு எந்தவொரு உண்மையான பங்களிப்பையும் செய்யவில்லை.
அவர்கள் கோட்டாபய ராஜபக்சவின் அரசியல் நலன்களை நிறைவேற்றுவதற்காக மட்டுமே ஒரு குழுவாகச் செயல்பட்டனர்.
மக்கள் கட்சி அரசியலில் இருந்து ராஜபக்சர்களை வெளியியேற்றி, நாட்டின் பழைய ஊழல் அரசியல் கலாச்சாரத்தை நிராகரித்துவிட்டதால், நாட்டை அழித்த மகிந்த, கோட்டாபய மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் தர்மத்தின் வேதனையான கர்மவினைக்கு ஏற்ப தண்டனை அனுபவிக்கும் நேரம் வந்துவிட்டது” என சரத் பொன்சேகா கூறியுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |