மரண தண்டனை கைதி நாடாளுமன்றம் வரலாம் என்றால் ரஞ்சன் ஏன் வரமுடியாது? லக்ஷ்மன் கிரியெல்ல கேள்வி
மரண தண்டனை குற்றவாளிக்கு நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்ள முடியும் என்ற கலாசாரத்தை தற்போதைய சபாநாயகரே அறிமுகப்படுத்தியுள்ளார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல குற்றம்சாட்டியுள்ளார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது பேசிய அவர், பிரேமலால் ஜயசேகரவிற்காக தற்போதைய சபாநாயகர் புதிய நாடாளுமன்ற கலாசாரமொன்றை உருவாக்கியுள்ளார். பிரேமலால் ஜயசேகர மேன் முறையீடு செய்திருப்பதால் அவர் நாடாளுமன்றத்திற்கு வர முடியும் என்று சபாநாயகர் கூறியுள்ளார்.
அவ்வாறெனில் ரஞ்சன் ராமநாயக்கவிற்கும் நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்ள அனுமதியளிக்க வேண்டும் என்று சபாநாயகரை வலியுறுத்துகின்றோம்.
சபாநாயகர் தீர்மானங்களை எடுக்கும் போது ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் சமமான வகையில் அமைய வேண்டும். எனவே 9 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு சாதகமான தீர்மானம் அறிவிக்கப்பட வேண்டும் என்று சபாநாயகரிடம் கேட்டுக் கொள்கின்றோம்.
நீதிமன்ற அவமதிப்பு தொடர்பான சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படவில்லை என்பதால் , எதிர்க்கட்சி அந்த சட்டத்திற்கான பரிந்துரைகளை நாடாளுமன்றத்தில் முன்வைக்க எதிர்பார்த்துள்ளது.
மரண தண்டனை குற்றவாளிக்கு நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்ள முடியும் என்ற கலாசாரத்தை தற்போதைய சபாநாயகரே அறிமுகப்படுத்தியுள்ளார்.
எனவே ரஞ்சன் விவகாரத்திலும் சாதகமான தீர்மானத்தை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கின்றோம் என்றார்.