குமார ஜயகொடியின் பதவி விலகல்...! சகாக்களுடன் முக்கிய ஆலோசனையில் ரணில்
சத்திர சிகிச்சையின் பின்னர் நாடு திரும்பி மருத்துவக் கண்காணிப்பில் இருக்கும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமைகள் குறித்துத் தனது நெருக்கமான அரசியல் சகாக்களுடன் முக்கிய ஆலோசனைகளை முன்னெடுத்துள்ளார்.
இந்த வாரம் இடம்பெற்ற இந்தக் கலந்துரையாடல்களில் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன, பொதுச் செயலாளர் தலதா அத்துகோரள மற்றும் சாகல ரத்நாயக்க ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
முன்னாள் வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி தனது பதவியில் இருந்து விலகியமைக்கான உண்மைப் பின்னணியை அரசு நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும் என ரணில் விக்ரமசிங்க இதன்போது வலியுறுத்தியுள்ளார்.
உத்தியோகபூர்வ அறிக்கை
இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிக்கையை வெளியிடுமாறு பேராசிரியர் ஜி.எல். பீரிஸுக்கு அவர் பணிப்புரை விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
தற்போதைய அரசுக்குச் சரியான திசையைக் காட்ட எத்தனை பேர் ஆலோசனை வழங்குகின்றார்கள் என ரணில் இதன்போது கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் சுட்டிக்காட்டியதாவது “ஒருபுறம் எரான் விக்கிரமரத்னவை உள்வாங்க முயற்சிகள் நடக்கின்றன.
மறுபுறம் ஹர்ஷ டி சில்வாவிடம் ஆலோசனைகள் பெறப்படுகின்றன.
மோசடிக் குற்றச்சாட்டு
எரான் விக்கிரமரத்னவை இவ்வாறான பதவிகளுக்குக் கொண்டுவருவதற்கு ஐக்கிய மக்கள் சக்திக்குள்ளேயே கடும் எதிர்ப்பு நிலவுகின்றது.
இந்தத் திரைமறைவுப் பேச்சுகளுக்குப் பின்னால் யார் இருக்கின்றார்கள் என்பது மர்மமாகவே உள்ளது” என அவர் தெரிவித்துள்ளார்.

அரசுக்கு எதிராக எழுந்துள்ள மோசடிக் குற்றச்சாட்டுகளை மூடிமறைக்கப் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்று சாடிய ரணில், வாக்களித்த மக்களை முட்டாள்களாக்க அரசு முற்படுகின்றது என்றும் தெரிவித்துள்ளார்.
எனவே, உண்மை நிலையை மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டியது அவசியம் என்றும் இதற்கு எதிராகக் கூட்டு எதிர்க்கட்சி வலுவாகச் செயற்பட வேண்டும் என்றும் ரணில் விக்ரமசிங்க இதன்போது அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
முகமாலை நவீன போரியல் விதிகளை மாற்றியமைத்த ஈழத்து ஸ்டாலின்கிராட் 1 மணி நேரம் முன்