நாட்டில் தீவிரமடையும் மற்றுமொரு நோய்த்தாக்கம் : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
இலங்கை முழுவதும் எலிக்காய்ச்சல் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு (National Institute of Infectious Diseases) தெரிவித்துள்ளது.
அத்துடன் இரத்தினபுரி, குருநாகல், கேகாலை, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களிலிருந்தே அதிக நோயாளிகள் பதிவாகியுள்ளதாக தொற்றுநோயியல் பிரிவின் வைத்திய நிபுணர் துஷானி தபரேரா தெரிவித்துள்ளார்.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த விடயங்களைக் குறிப்பிட்டார்.
நோய் பரவக்கூடியவர்கள்
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ”இந்த நோய் ஒரு பற்றீரியாவால், குறிப்பாக பாலூட்டிகளின் சிறுநீர் வழியாகப் பரவுகிறது. உண்மையில், இந்த பற்றீரியா எலிகளின் சிறுநீர் அமைப்பில் வாழ்கிறது.
எலிகள் தண்ணீர் குடிக்கும்போது, அவற்றின் சிறுநீர் தண்ணீரிலோ அல்லது மண்ணிலோ கலக்கிறது. நாம் அந்த மண் அல்லது தண்ணீரை பயன்படுத்தும் போது, மக்களுக்கு இந்த நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
மாவட்ட ரீதியாக இந்த நோயாளிகள் பெரும்பாலும் இரத்தினபுரி, குருநாகல், கேகாலை, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் காணப்படுகிறார்கள்.
அதேநேரத்தில், நெல் விவசாயிகள், சில மாவட்டங்களில் சுரங்கத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் கீரைத் தோட்டங்களில் பணியாற்றுபவர்கள் இந்த நோயினால் பாதிக்கப்படக்கடும்.
சிறுவர்கள் மத்தியில் பரவும் காய்ச்சல்
இதேவேளை, கொழும்பில் உள்ள லேடி றிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் சிறுவர் வைத்திய நிபுணர் கோசல கருணாரத்ன, இந்த நாட்களில் சிறுவர்கள் மத்தியில் பரவி வரும் காய்ச்சல் தொடர்பான நோய்கள் குறித்து ஊடக சந்திப்பின் போது விளக்கினார்.
இந்த நாட்களில் குழந்தைகளிடையே கடுமையான காய்ச்சல் பரவி வருகிறது. இது புதிய விடயம் இல்லை. ஏனெனில் பருவமழையுடன் காய்ச்சல் உள்ளிட்ட பல நோய்கள் பரவுகின்றன. ஒவ்வொரு வருடமும் இதை நாங்கள் 'ஷவர் பீவர்' என்று சொல்றோம்.
இந்த முக்கிய பிரிவில் நமக்கு மிக முக்கியமானவை டெங்கு, எலிக்காய்ச்சல், இன்ஃப்ளூவென்ஸா மற்றும் சிக்குன்குனியா அத்துடன் காய்ச்சலுடன் வரும் வயிற்றுப்போக்கு.
உங்கள் குழந்தைக்கு அதிக காய்ச்சல், வாந்தி, வயிற்று வலி அல்லது சிறுநீர் கழிப்பதில் சிரமம் இருந்தால், காத்திருக்க வேண்டாம் உடனடியாக வைத்தியசாலைக்குச் செல்லுங்கள்.” என தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
