புலம்பெயர் தமிழர்களின் உயர்வுகளுக்கு தமிழகத்தில் கிடைக்கும் அங்கீகாரம்
புலம்பெயர் தமிழர்கள் தங்களுடைய வாழ்க்கையைத் தக்கவைத்துக் கொள்வதற்குத் தனிமனிதர்களாக நிகழ்த்திய வாழ்க்கைப் போராட்டம் என்பது சொல்லில் அடங்காதது.
இன்று புலம் பெயர் சமூகமானது ஒரு சில தேசங்களின் வளங்களையும் விட அதிகமான பொருளாதார நிறைவு கொண்ட சமூகமாக வளர்ந்து வருகிறது.
ஒரு மில்லியனுக்கு மேற்பட்ட புலம்பெயர் மக்களின் கல்வி,பொருளாதாரம் என்பன சில தேசங்களின் மொத்தச் சொத்தையும் விட அதிகமாக இருக்கும் என்பதற்கு ஆதாரம் அவசியமில்லை. டொலர்களாக, பவுண்களாக, ஈரோக்களாக, பிராங்குகளாக இவர்களின் வருமானம் 20 ஆண்டுகளில் நான்கு மடங்குகளாக அதிகரித்துள்ளது.
பொருளாதார முன்னேற்றம் இப்படியென்றால் கல்வி, தலைமைத்துவ முன்னேற்றங்கள் மிக உச்சங்களைத் தொடுகின்றன.
இப்படி புலம்பெயர்ந்தவர்களில் ஒருவர்தான் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த சுபா உமாதேவன் (Suba Umadevan) என்று , சுவிட்சர்லாந்தின் பிரபல நிதி நிறுவனமான ஆதா (Aadaa) நிறுவனத்தின் நிர்வாக பணிப்பாளர் , முனைவர் கல்லாறு சதீஷ் புகழாரம் சூட்டியுள்ளார்.
இவர் ஐந்து மொழிகளில் சரளமாக உரையாற்றுகிறார். பல மில்லியன் பணத்தை நிர்வகிக்கும் ஒரு சர்வதேச நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளராக பணியாற்றுகிறார்.
சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் முக்கிய பொறுப்பிலிருந்து சில நாடுகள் மற்றும் போராட்ட இயக்கங்களுடனான பேச்சுவார்த்தையில் இராஜதந்திரியாகக் கலந்து கொள்கிறார்.
இவை அனைத்துக்கும் சிகரம் வைத்தது போல் எந்த இனம் பல்கலைக்கழகக் கல்வி மறுக்கப்பட்டு நாடோடியாகப் புறப்பட்டதோ அந்தச் சமூகத்திலிருந்து தோன்றிய சுபா உமாதேவன் தற்போது சுவிட்சர்லாந்தின் புகழ்மிக்க லுசேர்ன் பல்கலைக்கழகத்தின் ஆலோசகராகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இதற்கான ஏனைய ஆலோசகர்கள் Coop , Css போன்ற மிகப் பெரும் நிறுவனங்களின் நிறைவேற்று அதிகாரி என்றால், இவரின் உயரம் என்னவென்று சொல்லத் தேவையில்லை.
தமிழகத்திலிருந்து வெளிவரும் பத்திரிகைகளில் விற்பனையில் முதலிடம் வகிக்கும் ‘தினத்தந்தி’ பத்திரிகை நேற்று தனது ஞாயிற்றுக்கிழமை இணைப்பிதழான ‘தேவதை’யின் அட்டைப்படக் கட்டுரையுடன் சுபா உமாதேவன் அவர்களின் உயரங்களைப் பேசியதானது, புலம்பெயர் தமிழர்களின் உயர்வுகளுக்கு தமிழகத்திலும் கிடைக்கும் அங்கீகாரமாகும் என்றால் அது மிகை அல்ல என , முனைவர் கல்லாறு சதீஷ் புகழாரம் சூட்டியுள்ளார்.
சுபா உமாதேவன் IBC-தமிழ் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தயாரிப்பாளராக கடமையாற்றியவர் என்பதுடன், ஐரோப்பாவில் சாதனை நிகழ்த்திய பெண்களை அறிமுகப்படுத்தி 'நிமிர்ந்து நில்' என்ற ஒரு நிகழ்ச்சியை வெற்றிகரமாக வழங்கியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.