கல்வியியல் பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைப்பதில் தாமதம் : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
ஆசிரியர் சேவைக்காக கல்வியியல் பட்டதாரிகளை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கையை அரசாங்கம் வேண்டுமென்றே காலம் தாழ்த்தி வருவதாக அரச பல்கலைக்கழக கல்வியியல் பட்டதாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அத்துடன் இந்த பிரச்சினைக்கு விரைவாக தீர்வு காணாவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க நேரிடுமென அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அரச பல்கலைக்கழக கல்வியியல் பட்டதாரிகள் சங்கம் கொழும்பு பொது நூலக கேட்போர் ஏற்பாடு செய்திருந்த செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த சங்கத்தின் பேச்சாளர் இசுறு லக்ருவன் இவ்வாறு குறிப்பிட்டார்.
பதிலளிக்காத கல்வி அமைச்சு
அவர் மேலும் குறிப்பிடுகையில், “ஆசிரியர் சேவைக்காக கல்வியியல் பட்டதாரிகளை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கையை அரசாங்கம் வேண்டுமென்று காலம் தாழ்த்தி வருகிறது.
இந்த விடயத்தை ஒவ்வொரு மாகாணசபையிலும் பல்வேறு காரணங்களை தெரிவித்து காலம் கடத்தி வருதுடன் பிரதமருக்கும் கல்வி அமைச்சுக்கும் இதுதொடர்பான விடயங்களை எடுத்துக்கூறியபோதும் அவர்கள் இதுதொடர்பில் எந்த பதிலையும் தெரிவிப்பதில்லை. அதற்கு பதிலாக அமைச்சரவையின் தீர்மானமென தெரிவித்து இணைத்துக்கொள்வது நிறுத்தப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் மாதம் 26ஆம் திகதி தென் மாகாண சபை ஆசிரியர் சேவைக்கு இணைத்துக்கொள்ள தயாராகி இருந்தபோதும், 25ஆம் திகதி, அமைச்சரவை தீர்மானம் என தெரிவித்து நியமனம் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது. மேல் மாகாணத்தில் மாத்திரம் இரண்டு வருடங்களுக்கான பட்டதாரிகளுக்கான நியமனம் வழங்கும் நடவடிக்கை இடம்பெற்றது.
கல்வியியல் பட்டதாரிகள் என்பவர்கள் ஆசிரியர் தொழிலுக்காக தத்துவார்த்த மற்றும் நடைமுறைப் பயிற்சியைப் பெற்ற தொழில்முறை பட்டதாரிகள் ஆவர். அவர்களை ஆசிரியர் சேவைக்கு இணைத்துக்கொள்வதை தாமதப்படுத்துவதால், அவர்கள் வேறு தொழில்களின் பால் பயணிப்பதுடன் அவர்கள் இந்த துறைக்கு இல்லாமல் போய்விடுகின்றனர்.
உயர்தரக் கலைப் பிரிவில் அதிக புள்ளி
கொழும்புப் பல்கலைக்கழகத்தின் கலைப் பீடத்துக்கு மாணவர்கள் சேர்த்துக்கொள்ளப்படுவது, உயர்தரக் கலைப் பிரிவில் அதிக இஸட் புள்ளிகளைப் பெற்ற மாணவர்களாகும்.
அந்த மாணவர்களில், பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டில் ஜீபீஏவில் அதிக மதிப்பெண் பெற்ற 80 மாணவர்கள் கல்விப் பீடத்திற்குத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அவர்கள் தங்களின் விடயப் பட்டத்தைத் அர்ப்பணித்து கல்வியியல் பட்டத்தை பூரணப்படுத்துகிறார்கள்.
அவ்வாறு இல்லாமல் தங்களின் விடயப் பட்டத்தை பெற்றிருந்தால் வேறு தொழில் ஒன்றுக்கு சந்தர்ப்பம் கிடைப்பதுடன் ஆசிரியராகுவதற்கு விரும்பினால், ஆசிரியர் பரீட்சைக்கு தோற்றி, வருவதற்கும் அவர்களுக்கு சந்தர்ப்பம் கிடைக்கிறது.
என்றாலும் அவர்கள் தற்போது கல்வியியல் பட்டப்படிப்பை படிப்பதால், அவர்களின் ஏனைய வாய்ப்புக்களை இல்லாமல் செய்துள்ளதுடன் ஆசிரியர் சேவைக்கும் சேர்த்துக்கொள்ளால் இருப்பதால் பாரிய பிரச்சினைகளுக்கு ஆளாகியுள்ளனர்.
தொடர்ந்து இது இடம்பெறுமாக இருந்தால், இதன் பின்னர் கல்வியியல் பட்டத்தை படிப்பதற்கு மாணவர்கள் வருவார்களா என சிந்திக்க முடியாமல் இருப்பதுடன் கல்விப்பீடத்தை மூடிவிட வேண்டி வரும். எனவே அரசாங்கம் இந்த விடயத்தில் தலையிடாவிட்டால், அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க நேரிடும்“ என தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
