மறு அறிவித்தல் வரும் வரை செல்ல வேண்டாம் - அவசர எச்சரிக்கை
தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம் நேற்று (நவம்பர் 25ஆம் திகதி) நள்ளிரவில் இலங்கைக்கு தெற்காக நிலை கொண்டிருந்தது.
அது அடுத்த 30 மணித்தியாலங்களில் ஒரு தாழமுக்கமாக வலுவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று (26.11.2024) வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது.
மேகமூட்டமான வானம்
இத் தொகுதியின் தாக்கம் காரணமாக நாட்டில் தற்போது நிலவும் மழை நிலைமையும் காற்று நிலைமையும் அடுத்த சில நாட்களில் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இவ்விடயம் தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களத்தால் வழங்கப்படும் எதிர்கால முன்னறிவிப்புகள் மற்றும் அறிக்கைகள் தொடர்பாக பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறார்கள்.
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மேகமூட்டமான வானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மிகப்பெரும் கன மழை
கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் சில இடங்களில் 150 மி.மீ க்கும் அதிகமான மிகப் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
வடக்கு, வடமத்திய, வடமேல், மேல் மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
எதிர்கால முன்னறிவிப்புகள்
பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இதன் காரணமாக, கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் நவம்பர் 26ஆம் திகதியிலிருந்து மறு அறிவித்தல் வரை நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களத்தால் வழங்கப்படும் எதிர்கால முன்னறிவிப்புகள் மற்றும் அறிக்கைகள் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.
யாழ்ப்பாணம்
மேலும், நிலவும் மழையுடன் கூடிய காற்று காரணமாக 171 குடும்பங்களைச் சேர்ந்த 560பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவில் 4 குடும்பங்களைச் சேர்ந்த 21பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 4 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
சங்கானை பிரதேச செயலர் பிரிவில் மின்னல் தாக்கம் மற்றும் வெள்ள அனர்த்தம் காரணமாக 4 குடும்பங்களைச் சேர்ந்த 16பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் வீடு ஒன்றும் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.
ஊர்காவற்துறை பிரதேச செயலர் பிரிவில் கடும் காற்று காரணமாக மூன்று குடும்பங்களை சேர்ந்த 7 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 2 வீடுகளும் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
யாழ்ப்பாணம் பிரதேச செயலர் பிரிவில் வெள்ள அனர்த்தம் காரணமாக 29 குடும்பங்களைச் சேர்ந்த 98பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வேலணை பிரதேச செயலர் பிரிவில் 3 குடும்பங்களைச் சேர்ந்த 10பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சாவகச்சேரி பிரதேச செயலர் பிரிவில் 123 குடும்பங்களைச் சேர்ந்த 385பேர் வெள்ளம் மற்றும் மின்னல் அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 5 வீடுகளும் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
கோப்பாய் பிரதேச செயலர் பிரிவில் 2 குடும்பங்களைச் சேர்ந்த 8பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஒரு வீடு முழுமையாக சேதமடைந்துள்ளது. காரைநகர் பிரதேச செயலர் பிரிவில் இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த 10பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.
மேலதிக தகவல் - கஜிந்தன்
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
பிரபாகரன் செய்த அதே தவறை தற்போது செய்துள்ள தமிழ் புலம்பெயர் சமூகம் 31 நிமிடங்கள் முன்