இலங்கைக்கும் இந்தியாவிற்கும் பாலம் அமைக்க தீர்மானம் - வாக்கெடுப்பை வலியுறுத்தும் மல்கம் ரஞ்சித்
இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான பாலத்தை கட்டுவதற்கு முன்னர் அது குறித்து சர்வஜன வாக்கெடுப்பை நடத்தவேண்டும் என கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கை வரலாறு முழுவதும் ஆட்சியாளர்களே அந்நியர்களிற்காக நாட்டிற்கு துரோகமிழைத்துள்ளனர். அவர்கள் எங்கள் நாட்டின் பகுதிகளை பல நாடுகளிற்கும் சக்திகளுக்கும் விற்பனை செய்கின்றனர்.
நாட்டிற்கு அழிவை ஏற்படுத்தக்கூடிய பல முட்டாள் தனமான முடிவுகளை எடுக்கின்றனர் என கர்தினால் தெரிவித்துள்ளார்.
இலங்கை - இந்திய உறவு

அவர்கள் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் பாலம் கட்டப்போகின்றனர்.
இந்தியாவின் கருத்திற்கு அமைய கடந்த காலங்களில் நாங்கள் சில விடயங்களை நடைமுறைப்படுத்த வேண்டும் என நிர்ப்பந்திக்கப்பட்டோம், அவை அனைத்தும் முட்டாள் தனமான கதைகள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எங்கள் நாடு எப்போதும் சுதந்திரமான நாடாக காணப்பட்டுள்ளது, நாங்கள் எந்த நாட்டிற்கும் அடிமைகள் இல்லை, இந்த நாட்டின் மன்னர்கள் இந்தியாவுடன் பொருளாதார விடயங்களை கையாண்டுள்ளனர்.
சர்வஜன வாக்கெடுப்பு

ஆனால் நாங்கள் எவருக்கும் அடிமையாகவில்லை எனவும் குறிப்பிட்டுள்ள அவர் நாட்டின் நிலைமை குறித்து நாங்கள் கவலையடைகின்றோம் சுதந்திரத்தை பெற்ற நாங்கள் தற்போது அதனை இழக்கப்போகின்றோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
எனவே இரு நாடுகளிற்கும் இடையில் பாலமொன்றை கட்டுவதென்றால் அது குறித்து மக்களின் கருத்தினை அறிவதற்கு சர்வஜன வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.