நல்லூரில் விடுதிகளைப் பதிவு செய்தல் தொடர்பாக விசேட அறிவிப்பு
நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளுக்குள் காணப்படும் அனைத்து விடுதிகளையும் எதிர்வரும் 30.07.2025 ஆம் திகதி மாலை 4 மணிக்கு முன்னர் பதிவுசெய்யவேண்டும் என பிரதேச சபையின் தவிசாளர் ப.மயூரன் தெரிவித்துள்ளார்.
தனியார் மாணவர் விடுதிகள், வீடுகளில் அறை கொடுத்து பணம் பெற்றுக்கொள்ளும் வீட்டின் உரிமையார்கள் மற்றும் வீடுகளை நாளாந்த, வாரந்த, மாதாந்த அடிப்படையில் வாடகைக்கு வழங்குபவர்கள் அனைவரும் இதற்குள் உள்வாங்கப்படுவார்கள் என அவர் கூறியுள்ளார்.
இதற்கான விண்ணப்பப்படிவங்களை நல்லூர் பிரதேச சபையின் தலைமைக் காரியாலயம், கொக்குவில் உப அலுவலகம், நல்லூர் உப அலுவலகம் ஆகியவற்றில் பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவித்துள்ளார்.
விண்ணப்பப்படிவங்கள்
பெற்றுக்கொண்ட விண்ணப்பப்படிவங்களினை பூரணப்படுத்தி எதிர்வரும் 30.07.2025 புதன் கிழமை மாலை 4 மணிக்கு முன்னர் மேற்குறிப்பிட்ட அலுவலங்களில் ஒப்படைக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நல்லூர் பிரதேச சபையின் இவ் பகீரங்க அறிவித்தலினை உதாசீனம் செய்து தங்களுடைய விடுதிகளை நல்லூர் பிரதேச சபையில் குறித்த காலப்பகுதிக்குள் பதிவு செய்யாமல் இருப்பவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கைகளை நல்லூர் பிரதேச சபை மேற்கொள்ளும் எனவும் தவிசாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

