நிறுத்தப்படும் ஓய்வூதியம்.... முன்னாள் எம்.பிக்களுக்கு நிவாரணம் : அமைச்சர் அறிவிப்பு
நாடாளுமன்ற ஓய்வூதியம் நிறுத்தப்படுவதால் பாதிக்கப்படும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஏதேனும் நிவாரணம் வழங்க முடியுமா என்பது குறித்து ஆராயப்படும் என அமைச்சர் ஹர்ஷன நாணாயக்கார (Harshana Nanayakkara) தெரிவித்துள்ளார்.
அதன்படி, பிரதேச செயலகங்கள் அல்லது பிற முறைகள் மூலம் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தால் அரசாங்கம் இது குறித்து ஆராயும் என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
நாடாளுமன்ற ஓய்வூதியம் (நீக்குதல்) சட்டமூலம் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டார்.
ஓய்வூதியம் பெற்று வந்தவர்கள்
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை நாடாளுமன்றத்தில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதிய உரிமையை இரத்து செய்யும் சட்டம் தற்போது உத்தியோகபூர்வமாக நிறைவேற்றப்பட்டு, நாட்டின் சட்டமாக மாறியுள்ளது.

இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டதன் மூலம், இனிவரும் காலங்களில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படமாட்டாது.
தற்போது நாடாளுமன்றத்தில் உள்ள உறுப்பினர்களுக்கு எதிர்காலத்தில் ஓய்வூதியம் கிடைக்காது என்பதுடன், இதுவரை ஓய்வூதியம் பெற்று வந்தவர்களுக்கும் அதனைத் தொடர்ந்து பெறுவது தடை செய்யப்பட்டுள்ளது.
கிவுல் ஓயா திட்டமும் இன அழிப்பு நடவடிக்கை...இதனை நிறுத்துவது தமிழ் மக்களின் கூட்டுப் பொறுப்பாகும்..!
தேசிய மக்கள் சக்தியின் கொள்கைப் பிரகடனம்
ஐந்து வருடங்கள் மாத்திரம் சேவையாற்றிவிட்டு, எவ்வித நிதிப் பங்களிப்பும் இல்லாத ஓய்வூதியத்தைப் பெறுவதற்கு எதிராக நிலவிய பொதுமக்களின் எதிர்ப்பைக் கருத்திற்கொண்டே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது தேசிய மக்கள் சக்தியின் கொள்கைப் பிரகடனத்தில் வழங்கப்பட்ட வாக்குறுதிகளுக்கு இணங்க அமைந்ததாகும். இந்தச் சட்டம் எவரையும் பழிவாங்கும் நோக்கம் கொண்டதல்ல, மாறாக ஒரு கொள்கை ரீதியான தீர்மானம்.
ஓய்வூதியம் நிறுத்தப்படுவதால் சில முன்னாள் உறுப்பினர்கள் பொருளாதார ரீதியாகச் சிரமப்படலாம் என்று எதிர்க்கட்சியினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அவ்வாறு கஷ்டப்படும் உறுப்பினர்கள் இருப்பின், அவர்கள் பிரதேச செயலகங்கள் அல்லது பிற முறைகள் மூலம் கோரிக்கை விடுத்தால், அரசாங்கம் அவர்களுக்கு ஏதேனும் நிவாரணம் வழங்க முடியுமா என்பது குறித்து ஆராயப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |