உலக வாழ் மக்களிடம் அரச தலைவர் கோட்டாபய விடுத்துள்ள கோரிக்கை
பூமியின் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்த வேண்டுமாயின், பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தைக் குறைத்தல் மற்றும் நிலையான சக்திவலு தீர்வுகளை ஊக்குவிப்பது அவசியம் என அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகளின் சக்தி வலு தொடர்பான அரச தலைவர்களின் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
“அனைவராலும் கொள்வனவு செய்யக் கூடியதும், நம்பிக்கை மிகுந்ததுமான நிலையான சக்தி வலுவைப் பெற்றுக் கொள்வதற்குரிய வாய்ப்பை உறுதிப்படுத்தல்” எனும் தொனிப்பொருளின் கீழ், இந்த மாநாடு இடம்பெற்றது.
இதில் கலந்து கொண்டு உரையாற்றிய அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ, மனித தேவைகளைப் பூர்த்தி செய்வதோடு, இந்த பூமியின் ஆரோக்கியத்தை பேணுவதற்கு, உலகில் அனைத்து மக்களும் முன்னுரிமை அளித்து செயற்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
மனிதர்களால் மேற்கொள்ளப்படும் சுற்றுச்சூழல் அழிவுகள் காரணமாக ஏற்படும் காலநிலை மாற்றங்களால் பூமிக்கு ஏற்படக்கூடிய அச்சுறுத்தல்களை, தொடர்ந்தும் புறக்கணிக்கலாகாது.
எதிர்வரும் சில தசாப்தங்களுக்குள் இவ்வாறான அச்சுறுத்தல்களை குறைத்து கொள்ள வேண்டுமாயின், முழு உலகமும் சுத்தமான சக்தி வலுக்களை நோக்கிச் செல்ல வேண்டியது அத்தியாவசியமாகிறது என்று அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.