ரிஷாட் தொடர்பில் எடுக்கப்பட்ட முடிவு சரியானதே - ஆளும்தரப்பு இன்று வெளியிட்ட தகவல்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பற்றிய விசாரணைகளின் இரகசியத்தன்மையை பாதுகாப்பதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனை வெளியே அனுமதிக்காமல் இருக்க எடுத்த முடிவு சரியானதென ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தெரிவித்துள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரத்தைப் போல மன்னாரில் 3000 ஏக்கர் நிலத்தை வைத்திருக்கும் ரிஷாட்டின் ஏனைய ஊழல்கள் பற்றியும் விசாரணை அவசியம் என்று பொதுஜன முன்னணியின் முக்கியஸ்தரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ்.பி.திஸாநாயக்க வலியுறுத்தினார்.
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினரான எஸ்.பி திஸாநாயக்க பங்கேற்ற ஊடகவியலாளர் சந்திப்பு அக்கட்சியின் கொழும்பிலுள்ள தலைமையகத்தில் இன்றைய தினம் நடைபெற்றது.
ரிஷாட் பதியுதீனின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி இல்லாமல் போவதற்கு நாடாளுமன்றமும் சபாநாயகரும் எந்த சந்தர்ப்பத்திலும் இடமளிக்க மாட்டார்கள். அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை பாதுகாப்பதற்கு சில முறைகள் உள்ளன. நாடாளுமன்றத்திற்கு அழைத்துவந்து மீண்டும் அழைத்துச் செல்லல் மற்றும் விடுமுறையை அங்கீகரித்தல் என வழிகள் உள்ளன.
எனது நினைவுப்படி இதுபோன்ற சந்தர்ப்பத்தில் சந்திரசேகரன் பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைதாகி 03 மாதங்கள் தடுப்பிலிருந்தார்.
எவ்வாறாயினும் சாதாரண விளக்கமறியல் அன்றி விசேட உத்தரவின் பேரில் இரகசிய காவல்துறையினரால் தடுத்து வைத்திருப்பதானது, அவர் கூறுகின்ற வாக்குமூல விடயங்கள் வெளியாகக்கூடாது என்பதற்காகும். ஆகவே நாடாளுமன்றத்திற்கு அவரை ஒருநாளாவது அழைத்துவந்தால் அந்த விசாரணை இரகசியம் அம்பலமாகிவிடும். பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைது செய்யப்படும் நோக்கம், வாக்குமூலம் மற்றும் விசாரணை முடியும்வரை வெளிப்படுத்தாமலிருப்பதாகும். சஹ்ரான் குழுவினருக்கு ரிஷாட் பதியுதீன் வாகன உதவி செய்திருப்பதற்கான சாட்சியங்கள் உள்ளன.
நானும் குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் இதுகுறித்த தகவல்களை அளித்திருக்கின்றேன். தற்கொலைக் குண்டுதாரிகளுக்கு சட்டவிரோதமாக இரும்பு, செப்பு என வழங்கியிருக்கின்றார். அது மிகவும் சிறிய நடுத்தர வர்த்தகர்களுக்காகவே அமைச்சுக்கு அந்த கோட்டா வழங்கப்பட்டது. எனினும் அதனை பெரிய வர்த்தகர்களுக்கு ரிஷாட் வழங்கினார்.
உறவினர்கள் தொடர்பின் ஊடாக குண்டுதாரிகளுடன் தொடர்பிருப்பது தெரியவந்திருக்கின்றது.
ரிஷாட்டிற்கு மன்னாரில் மாத்திரம் 3000 ஏக்கர் நிலம் உள்ளது. அவர் பல்வேறுபட்ட நபர்களின் பெயர்களில் உள்ளன. வெள்ளவத்தை உட்பட பல பிரதேசங்களில் சொந்த வீடுகள் உள்ளன. பாரிய சொத்து அவர் கடந்த காலங்களில் பெற்றிருக்கின்றார்.
அரிசியை இறக்குமதி செய்து துறைமுகத்தில் வைத்துக்கொண்டு அவை கெட்டுப்போனதன் பின்னர் அவற்றை 20, 30 ரூபாய்களில் பெற்று சுத்திகரிப்பு செய்து மீண்டுமாக சதொசவுக்கு விற்றுவிடுவார். கேள்விப்பத்திரம் ஊடாக 500 மில்லியன் ரூபாவை வருமானமாகப் பெற்றார்.
இன்று அமைச்சர் பந்துல குணவர்தன அவற்றை நிறுத்தி சீராக அந்தப்பணிகளை செய்கின்றார். ரிஷாட் குறித்து அவரது சொத்துக்கள், வருமானங்கள், என பல ஆவணங்களை சி.ஐ.டிக்கு வழங்கியிருக்கின்றேன்.
ஆகவே குறிப்பிட்ட காலத்திற்கு அவரது விசாரணைகளில் சமூகத்திற்கு வெளிவராமலிருக்கவே நாடாளுமன்றத்திற்குள் பிரவேசிக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும் அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை தக்கவைத்துக் கொள்வதற்காக பல வழிகள் உள்ளன' என்றார்.