புதிய அமைச்சர்களை நியமித்தார் பொறிஸ் ஜோன்ஸன்
இரண்டாம் இணைப்பு
பிரித்தானியாவின் புதிய நிதி அமைச்சர் மற்றும் சுகாதார செயலாளர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி, புதிய நிதி அமைச்சராக நாதிம் ஜஹாவி நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், நாதிம் ஜஹாவி வகித்த கல்வி செயலாளர் பதவிக்கு மிச்செல் டோனெலன் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, புதிய சுகாதார செயலாளராக ஸ்டீவ் பார்க்லே நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் முன்பு டச்சி ஆஃப் லான்காஸ்டரின் அதிபராகவும், டவுனிங் வீதியின் தலைமை அதிகாரியாகவும் இருந்தார்.
இதேவேளை, கென்யாவிற்கான பிரதமரின் வர்த்தக தூதர் தியோ கிளார்க் சற்றுமுன்னர் பதவி விலகியுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பொறிஸ் ஜோன்சனுக்கு நெருக்கடி - இரண்டு முக்கிய அமைச்சர்கள் பதவி விலகினர்
பொறிஸ் ஜோன்சனின் அரசாங்கத்திற்கு நெருக்கடி
பிரித்தானிய பிரதமர் பொறிஸ் ஜோன்சனுக்கு பெரும் அடியாக, அவரது இரண்டு முக்கிய அமைச்சர்கள் இன்று திடீரென பதவி விலகியுள்ளனர்.
பிரித்தானிய சுகாதார செயலாளர் சஜித் ஜாவித் பதவி விலகுவதாக அறிவித்த சில நிமிடங்களில், நிதியமைச்சர் ரிஷி சுனக் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். பிரித்தானிய நிதியமைச்சர் ரிஷி சுனக் மற்றும் சுகாதார செயலாளர் சஜித் ஜாவித் இருவரும் அடுத்தடுத்து ராஜினாமா செய்து, பிரதமர் பொறிஸ் ஜோன்சனின் அரசாங்கத்தை நெருக்கடியில் ஆழ்த்தியுள்ளனர்.
நம்பிக்கையை இழந்துவிட்டீர்கள்
பிரதமருக்கு எழுதிய கடிதத்தில், சுகாதார செயலாளர் சஜித் ஜாவித் "இனி நல்ல மனசாட்சியுடன் தொடர முடியாது... உங்கள் தலைமையின் கீழ் இந்த நிலைமை மாறாது என்பது எனக்கு தெளிவாகத் தெரிகிறது - எனவே நீங்கள் என் நம்பிக்கையையும் இழந்துவிட்டீர்கள்" என்று கூறியுள்ளார்.
மேலும், பல எம்.பிக்களும் பொதுமக்களும் பொறிஸ் ஜோன்சனின் தேசிய நலனுக்காக ஆட்சி செய்யும் திறனில் நம்பிக்கை இழந்துவிட்டனர் என்றும் ஜாவித் கூறினார்.
சாதாரணமாக எடுத்த முடிவு அல்ல
நிதியமைச்சர் ரிஷி சுனக், தனது ராஜினாமா கடிதத்தில், "தொற்றுநோய், உக்ரைனில் நடந்த போர் மற்றும் பிற கடுமையான சவால்களின் பொருளாதார விளைவுகளை உலகம் அனுபவிக்கும் போது நான் பதவியில் இருந்து விலகுவது நான் சாதாரணமாக எடுத்த முடிவு அல்ல. அரசாங்கத்தை முறையாகவும், திறமையாகவும், தீவிரமாகவும் நடத்த வேண்டும் என்று பொதுமக்கள் சரியாக எதிர்பார்க்கிறார்கள். இதுவே எனது கடைசி அமைச்சு பணியாக இருக்கலாம், ஆனால் இந்த தரநிலைகள் போராடுவதற்கு தகுதியானவை என்று நான் நம்புகிறேன், அதனால் தான் ராஜினாமா செய்கிறேன்.
அரசாங்கத்தை விட்டு வெளியேறுவது வருத்தமாக உள்ளது" என்று கூறினார், ஆனால் "நான் இதைத் தொடர முடியாது" என்ற முடிவுக்கு வந்துள்ளதாக ரிஷி சுனக் தனது ராஜினாமா கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
பிரதமர் பொறிஸ் ஜோன்சன் தனது முன்னாள் விப் கிறிஸ் பிஞ்சர் மீது பாலியல் முறைகேடு புகார்கள் கூறப்பட்டதை தொடர்ந்து, அவர் அரசாங்கப் பணிக்கு தகுதியற்றவர் என்பதை உணராமல் அவர் செய்த தவறுக்கு மன்னிப்புக் கேட்டதால் இந்த ராஜினாமாக்கள் வந்துள்ளன.
