விவசாயிகளுக்கு 1,200 மில்லியன் ரூபாய் இழப்பீடு : வெளியான தகவல்
மாத்தறை நில்வளா ஆற்று தடுப்பணை கட்டுமானத்தினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக, பயிர்ச்சேதங்களுக்கு உள்ளான விவசாயிகளுக்கான இழப்பீடு குறித்து அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது.
அதன்படி, குறித்த விவசாயிகளுக்கான முதற்கட்ட இழப்பீட்டுத் தொகை வழங்கும் பணிகள் வரும் மே 27ஆம் திகதி முதல் தொடங்கப்படும் என விவசாய மற்றும் விவசாய காப்புறுதிச் சபை அறிவித்துள்ளது.
மாத்தறை, மாலிம்படை பகுதியில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தலைமையில் இதற்கான ஆரம்ப நிகழ்வு நடைபெறவுள்ளது.
விவசாய காப்புறுதிச் சபை
கடந்த 2019ஆம் ஆண்டு சிறுபோகம் முதல் 2022ஆம் ஆண்டு சிறுபோகம் வரையிலான தொடர்ச்சியான 7 பயிர்ச்செய்கை போகங்களில் ஏற்பட்ட பயிர்ச் சேதங்கள் குறித்த விரிவான மதிப்பீடுகளின் அடிப்படையிலேயே இந்த இழப்பீடுகள் வழங்கப்படவுள்ளன.

விவசாய மற்றும் விவசாய காப்புறுதிச் சபையின் அங்கீகரிக்கப்பட்ட நடைமுறைகளின்படி, உற்பத்திச் செலவு மற்றும் தற்போதைய நெல் விலை ஆகியவற்றை கருத்திற் கொண்டே இந்த இழப்பீட்டுத் தொகைகள் கணக்கிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த இழப்பீட்டுத் திட்டத்திற்காக 2026ஆம் ஆண்டுக்கான பாதீட்டின் மூலம் மொத்தம் 1,200 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் இதன் மூலம் 5,000க்கும் மேற்பட்ட தகுதியுடைய விவசாயிகள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
நில்வளா ஆற்றின் குறுக்கே உப்பங்கழி தடுப்பணை அமைக்கப்பட்டதால், அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கி நெற்பயிர்ச் செய்கைக்கு ஏற்பட்ட இழப்புகளுக்கு இழப்பீடு வழங்குவதற்காக அமைச்சரவையின் ஒப்புதல் அளிக்கப்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |