உலக நாடுகளுக்கு பேரதிர்ச்சி! உலகின் சக்திவாய்ந்த ஏவுகணையை நிறுவுகிறது ரஷ்யா - புடின் அறிவிப்பு
ரஷ்யாவின் புதிய தலைமுறை அணுசக்தி ஏவுகணையான 'சர்மத்' இந்த ஆண்டின் இறுதியில் பயன்பாட்டிற்கு வரும் என்று அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புடின் அறிவித்துள்ளார்.
இந்த ஏவுகணை உலகின் மிக சக்திவாய்ந்த ஏவுகணை என்றும், தற்போதுள்ள மற்றும் எதிர்காலத்தில் வரவிருக்கும் எந்தவொரு ஏவுகணை எதிர்ப்பு பாதுகாப்பு அமைப்புகளையும் ஊடுருவிச் செல்லும் திறன் கொண்டது என்றும் புடின் தெரிவித்துள்ளார்.
ஏவுகணையின் தாக்கும் திறன்
இதன் தாக்கும் திறன் 35,000 கிலோமீற்றருக்கும் அதிகம் என்றும் மேற்கத்திய நாடுகளின் அணு ஆயுதங்களை விட நான்கு மடங்கு அதிக வெடிப்புத் திறன் கொண்ட அணுக்கரு முனைகளை சுமந்து செல்லும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

Image Credit: Sky News
அத்தோடு, குறித்த ஏவுகணையால் ஆயிரக்கணக்கான மைல் தொலைவில் உள்ள அமெரிக்கா அல்லது ஐரோப்பிய இலக்குகளைத் துல்லியமாகத் தாக்க முடியும் என ரஷ்யா கூறுகிறது.
பல ஆண்டுகளாக இந்த ஏவுகணைத் திட்டம் பல்வேறு தடைகளையும் தோல்விகளையும் சந்தித்து வந்ததாக கூறப்படுகிறது.
புடினின் அறிவிப்பு
குறிப்பாக 2024 செப்டம்பரில் நடத்தப்பட்ட சோதனையின்போது ஏவுகணை ஏவுதளத்திலேயே வெடித்துச் சிதறியதாக மேற்கத்திய ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Image Credit: PRIO
இருப்பினும், கடந்த செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்ட சோதனை வெற்றி பெற்றுள்ளதாக ரஷ்ய இராணுவத் தளபதிகள் ஜனாதிபதி புடினிடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.
இந்நிலையில், உக்ரைனுக்கு ஆதரவாக மேற்கத்திய நாடுகள் தலையிடுவதைத் தடுக்கும் ஒரு உத்தியாகவே புடினின் இந்த அறிவிப்பு பார்க்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |