கோட்டாபயவின் சுபீட்சத்தின் நோக்கு விஞ்ஞாபனத்தை குப்பி விளக்கில் வாசிக்க வேண்டிய நிலை! சஜித் கிண்டல்
குப்பி விளக்கின் வெளிச்சத்திலேயே அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவின் (Gotabaya Rajapaksa) சுபீட்சத்தின் தொலை நோக்கு விஞ்ஞாபனத்தை வாசிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.
இந்த துர்பாக்கியம் நிறைந்த ஆட்சியை உடன் விரட்டியடிக்க வேண்டும் என்றும் அதனைநாடாளுமன்ற கட்சி தாவல்களின் ஊடாக முன்னெடுக்க முடியாது. மக்களின் வாக்குகளின் ஊடாக மாத்திரமே ஆட்சியை கவிழ்ப்போம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பதுளையில் நேற்றைய தினம் இடம்பெற்ற இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் விசேட மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இநச்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் தனது உரையில்,
தற்போதைய அரசாங்கம் நாட்டை எந்தளவு மோசமான நிலைமைக்கு தள்ளியுள்ளது என்றால் 2019 இல் தற்போதைய ஆட்சியாளர்கள் கொண்டு வந்த 'சுபிட்சத்தின் தொலை நோக்கு' கொள்கை பிரகடன விஞ்ஞாபனத்தை குப்பி விளக்கு வெளிச்சத்திலேயே வாசிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
அதற்கு பதிலாக நாட்டை கட்டியெழுப்பும் நோக்கும் வேலைத்திட்டமும் அவசியம். நாடாளுமன்ற கட்சி தாவல்களின் ஊடாக அன்றி இந்நாட்டு மக்களின் முன்னிலையில் சென்று ஆட்சியை மாற்றுவேன்.
எல்லாவற்றையும் விட மக்களின் வாக்குகளே அவசியம். அரசாங்கம் அமைச்சர்களை மாற்றி வருவதாகவும் இந்நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய அழிவுக்கு அமைச்சர்களை மாற்றுவதன் ஊடாக பதிலை தேட முடியாது.
அரசாங்கம் வந்ததில் இருந்து இதுவரை செய்தது தன்னிச்சையாகவும் தூர நோக்கற்ற வகையில் செயற்பட்டு நாட்டை மோசமான நிலைமைக்கு தள்ளியது மாத்திரமே. கட்சி தாவல்களின் மூலம் அதனை மாற்ற முடியாது என்றும் செய்ய வேண்டியது முழுமையாக அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப வேண்டியதே.
எதிர்க்கட்சியிலுள்ள பிரதான கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி மக்களின் போராட்டங்களுக்கு முன்னின்று தலைமை தாங்குவது மாத்திரமின்றி அந்த போராட்டத்தை வெற்றியுடன் முடிக்கும் வல்லமை கொண்டது.
நாட்டின் உழைக்கும் மக்களுக்கு எதிராக அரசாங்கத்தினால் கொண்டு வரப்பட்ட மிகை கட்டண வரி விதிப்பை தோற்கடிக்க தொடர்ந்து போராடிய ஐக்கிய மக்கள் சக்தி நீதிமன்றத்தை நாடி மக்களின் உரிமையை பெற்றுக்கொடுத்துள்ளது.
இந்நாட்டின் ஓய்வூதியர்களுக்கு ஆப்பு வைக்க நினைத்த அரசாங்கம் இறுதியில் வரி விதிப்பை மீளப்பெற்றுக் கொண்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
