பின் கதவு வழியாக பசிலுடன் சஜித் ரகசிய ஒப்பந்தம்!! அம்பலப்படுத்தினார் பாலித
21ஆவது திருத்தம் தொடர்பில் பின் கதவு வழியாக பசில் ராஜபக்சவின் ஒப்பந்தத்தை எதிர்க் கட்சி தலைவர் சஜித் பிரேமதாச நிறைவேற்றி வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.
கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் கட்சியின் பிரதிநிதிகள் நடத்திய கலந்துரையாடலின்போதே பாலித ரங்கே பண்டார இதனை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து கருத்துரைத்த அவர், “21ஆவது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவளிக்கப் போவதில்லை என கூறும் எதிர்க்கட்சித் தலைவரின் ஒரே நோக்கம் ராஜபக்சக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதேயாகும்.
சுமந்திரன் மற்றும் சாணக்கியனும் ஒப்பந்தம்
21ஆவது திருத்தச் சட்டத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவாக இருந்த போதிலும் சுமந்திரன் மற்றும் இராசமாணிக்கம் சாணக்கியன் ஆகிய இருவர் மாத்திரமே எதிர்க்கின்றனர். எனவே, பசில் ராஜபக்சவின் ஒப்பந்தத்தை அவர்களும் நிறைவேற்றி வருவது தெரியவருகிறது.
21வது திருத்தமானது 19வது திருத்தத்தை விடவும் சக்தி வாய்ந்ததும் ஜனநாயகமானதுமான அரசியலமைப்புத் திருத்தம். நாடாளுமன்றத்தின் சுதந்திரத்தை உறுதிப்படுத்தும் அரசியலமைப்புத் திருத்தம்” எனக் குறிப்பிட்டார்.