கண்துடைப்புச் செய்கிறதா இலங்கை அரசு? சந்தேகத்தைக் கிளப்பிய சமிந்த விஜேசிறி
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கு இலங்கை அரசாங்கத்திற்கு காலக்கெடு விதித்துள்ள கொழும்பு மறைமாவட்ட பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையை ஏமாற்றும் நாடகத்தை அரசாங்கம் அரங்கேற்றியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
குறித்த காலக்கெடுவிற்குள் நீதியை வழங்கிவிட்டதாக காண்பிக்கவே, தாக்குதலின் பிரதான சூத்திரதாரி எனக் குறிப்பிட்டு நௌபர் மௌலவி என்ற நபரை கைதுசெய்த விடயத்தை அரசாங்கம் முதன்மைப்படுத்துவதாக அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி குற்றஞ்சாட்டினார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், அரசாங்கத்தின் இந்தக் கைது, திருப்தியளிக்கிறதா எனவும் பேராயரிடம் வினவியுள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்ட சமிந்த விஜேசிறி எம்.பி, உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி எனக் குறிப்பிட்டு நௌபர் மௌலவி கைது செய்யப்பட்டுள்ளமையால் திருப்தியடைந்துள்ளீர்களா என்று பேராயரிடம் கேட்க விரும்புகின்றோம்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெறுவதற்கு இரு தினங்களுக்குப் பின்னர் எமது அரசாங்கத்தில் நௌபர் மௌலவி கைது செய்யப்பட்டார்.
எனினும் இவர் இதன் பிரதான சூத்திரதாரி என்ற கருத்து எங்கும் தெரிவிக்கப்படவில்லை. அத்தோடு இவர் உயிர்த்த ஞாயிறு தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிற்கு அழைக்கப்படவுமில்லை.
இம்மாதம் 21 ஆம் திகதிக்கு முன்னர் பொறுப்பை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக இந்த அரசாங்கம் இவ்வாறு செயற்படுகிறது என்பது தெளிவாகிறது.
நௌபர் மௌலவி இதன் பிரதான சூத்திரதாரி என்பதை நம்ப முடியாது. இதன் உண்மையான சூத்திரதாரி யார் என்பதை மறைப்பதே அரசாங்கத்தின் தேவையாகும்.
21 ஆம் திகதிக்கு முன்னர் நியாயம் வழங்கப்பட்டுள்ளது என்று காண்பித்து பேராயரை அமைதியாக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையில் அரசாங்கத்தின் தவறுகளை மறைப்பதற்காக சில மதகுருமார்களும் நாடகங்களை அரங்கேற்றுகின்றனர். எனவே அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்துகின்றோம்.
இவ்வாறான நாடங்களில் ஏமாந்துவிட வேண்டாம் என்று மக்களிடம் கேட்டுக் கொள்கின்றோம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.