இந்தியாவிலிருந்து தரமான மருந்துகளே இலங்கைக்கு விநியோகிக்கப்படுகின்றன- சமன் ரத்நாயக்க
தற்போது நாட்டில் பயன்படுத்தப்படும் மருந்துகளில் 80% வரை இந்தியாவிலிருந்து இலங்கைக்கு விநியோகிக்கப்படுவதுடன் இவை இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் பூரண அனுமதியுடன் விநியோகிக்கப்படுகிறது என சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் விசேட வைத்தியர் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற சுகாதாரத்துறையின் தற்போதைய நிலை தொடர்பாக ஊடகங்களுக்கு தெளிவுப்படுத்தும் கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
மருந்துக் கொள்வனவு

அவர் மேலும் தெரிவிக்கையில், "தரமற்ற மருந்துகளை நாட்டிற்குக் கொண்டு வருவதற்கு எப்போதுமே நடவடிக்கை எடுக்கவில்லை.
ஏதேனும் பதிவு செய்யப்பட்ட மருந்துகளில் சிக்கல்களை ஏற்படுத்துவதற்கு வாய்ப்புகள் உள்ளது.
சில மருந்துகள் நோயாளிகளுக்கு வழங்கப்படும் போது அவற்றில் சிக்கல்கள் ஏற்படுமாயின், அதற்காக சுகாதார சேவைகள் சபை விரைவாக சிகிச்சை வழங்குவதாகவும், ஆய்வுகளை மேற்கொண்டு அந்த மருந்துப் பாவனையை தவிர்ப்பதற்குப் பொருத்தமான முறையை சுகாதார அமைச்சு மேற்கொள்கிறது" என குறிப்பிட்டார்.
இவ்வாறு மருந்துகளைக் கொள்வனவு செய்வது என்பது இன்று நேற்று அல்ல முன்னைய காலத்திலிருந்தே நடைபெற்றுக்கொண்டு வருகிறது என அவர் மேலும் குறிப்பிட்டார்.