சனிக்கிழமைகளில் வைத்தியர்களுக்கு விடுமுறை : விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
நெருக்கடி நிலை காரணமாக சனிக்கிழமைகளை வைத்தியர்களுக்கான உத்தியோகபூர்வ விடுமுறை தினமாக அறிவிக்குமாறு வைத்திய நிபுணர்கள் சங்கம் (AMS) அரசாங்கத்திடம் அவசர கோரிக்கை விடுத்துள்ளது.
நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடி மற்றும் அதீத விலை உயர்வு காரணமாக சுகாதாரத் துறையினர் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ள நிலையில் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக அந்தச் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் பின்வரும் விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
எரிபொருள் தட்டுப்பாடு
குறிப்பாக வெளிமாவட்ட வைத்தியசாலைகளில் பணியாற்றும் வைத்திய நிபுணர்கள், ஒரு நாளைக்கு பலமுறை நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளது. தற்போதைய எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வால் இவர்களது போக்குவரத்துச் செலவுகள் கட்டுப்படியாகாத நிலையை எட்டியுள்ளன.

தற்போதைய சூழலில் சுகாதாரச் சேவைகளைத் தடையின்றி முன்னெடுப்பதற்கு, வாராந்த வேலை நாட்களை மீளமைத்து, சனிக்கிழமையை விடுமுறை தினமாக அறிவிப்பது அவசியமாகும்.
ஏனைய அரச துறை ஊழியர்களுக்கு எரிபொருள் விலை உயர்வுக்கு ஏற்ப கொடுப்பனவுகள் வழங்கப்படுகின்ற போதிலும், வைத்திய நிபுணர்களுக்கு போக்குவரத்துச் செலவுகளுக்காகப் போதுமான இழப்பீடுகள் வழங்கப்படுவதில்லை.
விசேட மருத்துவ சேவைகள்
தூர பிரதேசங்கள் மற்றும் பின்தங்கிய பகுதிகளில் பணியாற்றும் வைத்தியர்கள் மத்தியில் இந்தச் சூழல் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு உடனடித் தீர்வு காணப்படாவிட்டால், விசேட மருத்துவ சேவைகள் பாதிக்கப்படக்கூடும்.

இந்த நெருக்கடிக்குத் தீர்வு காணும் வகையில் அதிகாரிகளுடன் அவசர கலந்துரையாடலை மேற்கொள்ளத் தயாராக இருக்கின்றோம், பொதுமக்களுக்கான சுகாதார சேவைகளை உறுதிப்படுத்த இது மிக அவசியமானது” என்று அந்த சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |