மாயமான வடமராட்சி கடற்றொழிலாளர்: இந்திய எல்லை வரை தேடியும் சாதகமான முடிவுகள் இல்லை
வடமராட்சி கடற்பரப்பிலிருந்து காணாமல்போன கடற்றொழிலாளர் நால்வர் தொடர்பில், விசேட அனுமதியுடன் இந்திய எல்லை வரை தேடுதல் நடத்தியும் எவ்வித சாதகமான முடிவுகளும் கிடைக்கவில்லை என்று யாழ். மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் கிருஷ்ணன் அகிலன் தெரிவித்தார்.
வடமராட்சி கடற்பரப்பில் காணாமல்போன கடற்றொழிலாளர்களைக் கண்டறிவதற்காக எவ்வாறான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குத் பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், "காணாமல்போன கடற்றொழிலாளர் தொடர்பாகத் துறைசார் அமைச்சர், கடற்படையினருக்கு உரிய தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு ஆலோசனை வழங்கியிருந்தார்.
சந்தேகத்துக்கிடமான படகுகள்
அதனடிப்படையில், குறித்த பகுதி கடற்றொழிலாளர்களின் ஒத்துழைப்புடன் தேடும் பணிகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன.

தற்போது கடலில் காற்றின் வேகம் அதிகரித்துக்காணப்படுவதால், தேடுதல் நடவடிக்கைகள் தடைப்படாமல் இருக்கும் பொருட்டு, பாதுகாப்பான முறையில் உரிய அறிவுறுத்தல்களுக்கு இணங்கப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.
காணாமல்போன கடற்றொழிலாளர் இந்திய எல்லைப் பகுதிக்குள் திசைமாறிச் சென்றிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், விசேட அனுமதி பெறப்பட்டு கடற்றொழிலாளர் படகுகள் மூலம் அப்பகுதிகளில் தேடுதல் நடத்தப்பட்டு அவை கரை திரும்பியுள்ளன.
எனினும், இந்திய எல்லைக் கடற்பரப்பில் சந்தேகத்துக்கிடமான படகுகள் எதுவும் தென்படவில்லை. இருந்தபோதிலும், காணாமல்போன கடற்றொழிலாளர்களைக் கண்டறிவதற்காக அடுத்தகட்டமாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்துச் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் நாம் தொடர்ந்தும் தொடர்பில் இருந்து வருகின்றோம் என்றார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |