உடையும் தமிழரசுக்கட்சி...! புதிய கட்சியை உருவாக்க திரைமறைவில் திட்டம் - அம்பலமாகும் டீல்
இலங்கை தமிழரசுக்கட்சியை (ITAK) விட்டு புதிய தமிழரசுக்கட்சியை உருவாக்க தாயகத்திலுள்ள - புலம்பெயர் நாடுகள் மற்றும் இந்தியாவிலுள்ள தமிழ்த் தேசியவாதிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர் என அரசியல் வட்டாரங்களை மேற்கோள்காட்டி தகவல் வெளியாகியுள்ளது
இதனிடையே தமிழரசுக் கட்சியின் 6 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இதற்கு உள்ளது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இணையத் தளத்தில் வெளியாகும் தொடர் கட்டுரையிலேயே இந்த தகவல்கள் வெளியாகி இருப்பதாக யாழிலிருந்து வெளியாகும் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
கட்சி தப்பிப் பிழைக்க வாய்ப்பில்லை
அந்தக் கட்டுரையில், “தமிழ் அரசின் சமகால தலைமைகளால் அந்தக் கட்சி தப்பிப் பிழைக்க வாய்ப்பில்லை என்று உறுதியாக நம்பும் நிலையிலேயே புதிய தமிழ் அரசு ஒன்றை உருவாக்குவது குறித்து இலங்கை, இந்திய, புலம் பெயர்ந்த நாடுகளின் தீவிர தமிழ்த்தேசிய பக்தர்கள் இரவுபகலாக ஆலோசித்து வருகின்றனர் என்று தெரிய வருகிறது.
“மருத்துவர் சத்தியலிங்கத்தின் தேசியப்பட்டியல் நியமனம், சிறிமாவோ பண்டாரநாயக்கா ஆட்சியில் சுதந்திரக் கட்சியின் ஆதரவாளராக இருந்து விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனால் துரோகி என்று சுட்டுக்கொல்லப்பட்ட யாழ். மாநகர சபையின் முன்னாள் மேயர் அல்பிரட் துரையப்பாவின் வலதுகரமாகவும் முதுகெலும்பாகவும் செயற்பட்ட சீ. வீ. கே. சிவஞானம் (C.V.K. Sivagnanam), தமிழ் அரசுக் கட்சியின் பதில் தலைவராக நியமிக்கப்பட்டமை பதில் செயலாளர் சத்தியலிங்கத்துக்கு சுகவீனம் என்று கூறி பதில் செயலாளர் பதவியை சுமந்திரன் சுருட்டி இருப்பது போன்ற காரணங்களால் இனியும் தமிழ் அரசை திருத்த முடியாது என்ற நிலைக்கு தமிழ்த் தேசிய தீவிரசக்திகள் வந்துள்ளன.
இவையே புதிய தமிழ் அரசுக் கட்சியை உருவாக்கக் காரணம். “தமிழ் அரசுக் கட்சியின் எட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களில் கிழக்கில் நால்வரும் வடக்கில் இருவரும் ‘புதிய தமிழ் அரசு’ அமைவதில் உடன்பாடு டையவர்களாக இருக்கின்றனர் என்று தமிழ்நாட்டில் உள்ள மூத்த தமிழ்த் தேசியவாதியின் வட்டாரங்களில் இருந்து அறிய வருகிறது.
திரைமறைவு முயற்சிகள்
சுமந்திரன் அணியைச் சேர்ந்த சாணக்கியன், சத்தியலிங்கத்தை தள்ளி வைத்து இந்தத் திரைமறைவு முயற்சிகள் இடம்பெறுகின்றன.
கிழக்கின் தெற்கு எல்லையைச் சேர்ந்த 'பி2பி" செயற்பாட்டாளரும் தமிழ் அரசுக் கட்சி தந்தையின் பேரனும் இந்தத் திரைமறைவு முயற்சிகளில் முக்கியமானவர்.
இவ்வாறு புதிய தமிழ் அரசுக்கு பின்னால் மூத்த புலிகளும் தாயக, தமிழக, புலம் பெயர்ந்த நாடுகளில் வாழும் மூத்த தமிழ்த் தேசியவாதிகளும் பக்தர்களும் இருக்கிறார்கள்.
தமிழ் அரசு தந்தையின் பெயரை கட்சிப் பெயரில் சேர்த்துக் கொள்ளலாமா? என்றும் ஆலோசிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


உலகில் பெண் விடுதலையை சாத்தியப்படுத்திய தலைவர் பிரபாகரன்… 4 நாட்கள் முன்

நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
1 வாரம் முன்