கெஹெல்பத்தர பத்மேவின் கொலை பட்டியல் அடங்கிய ரகசிய அறிக்கை!
இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு விசாரணைக்காக இந்த நாட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பாதாள உலக தலைவர் கெஹெல்பத்தர பத்மே எனப்படும் மன்தினு பத்மசிறி, கணேமுல்லே சஞ்சீவவின் கொலை உட்பட பல கொலைகளுடன் தொடர்புடையவர் என நீதிமன்றுக்கு ரகசிய அறிக்கை சமர்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையானது, குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் வணிகக் குற்றப் பிரிவினரால் இன்று கொழும்பு மேலதிக நீதவானிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் விதிகளின்படி 90 நாட்கள் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ள கெஹல்பத்தர பத்மே தொடர்பாக இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதாவும் அதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
கண்காணிப்பு அறிக்கை
முன்வைக்கப்பட்ட உண்மைகளைப் பரிசீலித்த மேலதிக நீதவான், சம்பந்தப்பட்ட சந்தேக நபர் தொடர்பாக நீதவான் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டதா என்று விசாரித்தார்.
அதன்படி, சந்தேக நபர் தொடர்பான கண்காணிப்பு கொழும்பு கோட்டை நீதவானால் மேற்கொள்ளப்பட்டதாகவும், அது தொடர்பான அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவு
இந்த நிலையில், சமர்பிக்கப்பட்ட வழக்கு அறிக்கையை பெட்டகத்தில் வைக்க உத்தரவிடுமாறும் குற்றப் புலனாய்வு திணைக்களம் நீதவானிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
பின்னர், தொடர்புடைய வழக்கு அறிக்கையை பெட்டகத்தில் வைக்க உத்தரவிட்ட மேலதிக நீதவான், விசாரணையின் முன்னேற்றத்தை ஒக்டோபர் 13 ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
