வன்னிக் காடுகளுக்குள் இருந்த தலைவர் பிரபாகரன்! அன்ரன் பாலசிங்கம் பீரிஸிடம் பகிர்ந்த தகவல்
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஏன் சமாதானப் பேச்சுவார்த்தைகளின் போது உடன்பாடுகளுக்கு வரவில்லை என்பது குறித்த முக்கியத் தகவல்களை முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி. எல். பீரிஸ் நேர்காணல் ஒன்றில் பகிர்ந்துள்ளார்.
மேலும் 'ஈழம்' கொள்கையிலிருந்து தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பின்வாங்காத காரணத்தையும் அவர் கூறியுள்ளார்.
இலங்கை அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கும் இடையிலான சமாதானப் பேச்சுவார்த்தையில் அரசாங்கத்தின் தலைமைப் பேச்சுவார்த்தையாளராகப் பங்கேற்ற தனது அனுபவங்கள் குறித்து கருத்து வெளியிட்ட ஜி. எல். பீரிஸ்,
தனியாகப் பேசும் வாய்ப்பு
''பேச்சுவார்த்தையின் போது, தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கத்துடன் தனியாகப் பேசும் வாய்ப்பு கிடைத்தது.

அப்போது, ''இந்தச் சூழல் எங்குப் போய் முடியப்போகிறது என்று நமக்குத் தெரிகிறது. ஒரு வாய்ப்பு இருக்கும்போதே ஏன் இதனைப் பயன்படுத்திக் கொள்ளக் கூடாது'' என்பதை அன்ரன் பாலசிங்கத்திடம் எடுத்துறைத்தேன்.
இதற்குப் பதிலளித்த அன்ரன் பாலசிங்கம், "எனது தலைவரை சமாதான பேச்சுவார்த்தைக்கு இட்டுச்செல்ல நான் என்னால் முடிந்த அனைத்தையும் செய்துவிட்டேன்" என கூறினார்.
அதற்கு மேலதிகமாக வேலுப்பிள்ளை பிரபாகரன் மற்றும் விடுதலைப்புலிகள் அமைப்பின் நிலைப்பாடுகள் குறித்து அன்ரன் பாலசிங்கம் தெளிவுபடுத்தினார்.
தனிநாட்டுக் கொள்கை
இந்த காலத்தில் பிரபாகரன் வன்னிக் காடுகளுக்குள் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தார். பிரபாகரனைச் சுற்றியிருந்தவர்கள், அரசாங்கத்தால் ஒரு சில சிறிய போர்களில் மட்டுமே வெல்ல முடியுமே தவிர, ஒட்டுமொத்தப் போரையும் வெல்ல முடியாது என்று கூறி அவரை நம்ப வைத்த்துள்ளனர் என கூறவேண்டும்.

தான் இராணுவ ரீதியாக எவராலும் வெல்ல முடியாதவர் என்ற நம்பிக்கையில் பிரபாகரன் இருந்துள்ளார்.
ஈழம் என்ற தனிநாட்டுக் கொள்கைக்குக் குறைவாகக் கிடைக்கும் எந்தவொரு தீர்வையும் அல்லது சமரசத்தையும் ஏற்க அவர் தயாராக இருக்கவில்லை" என தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 8 Evening