செஞ்சோலை படுகொலையின் 17ஆம் ஆண்டு நினைவு நாள் - பிரித்தானியாவில் உணர்வுபூர்வமாக கடைப்பிடிப்பு
உலகத் தமிழர் வரலாற்று மையத்தின் இளையோர் அமைப்பினால் கடந்த 27ஆம் திகதி செஞ்சோலை வளாகப் படுகொலையின் 17ஆம் ஆண்டு நினைவு நாள் உணர்வுபூர்வமாக நடத்தப்பட்டது.
14.08.2006 அன்று வள்ளிபுனம் பகுதியில் அமைந்திருந்த, செஞ்சோலை வளாகத்தில், இடர் கால முகமைத்துவம், தலைமைத்துவ மற்றும் முதலுதவி பயிற்சிக்காக ஒன்றிணைக்கப்பட்டிருந்த முல்லைதீவு மாவட்டத்தில் உயர்தரம் கற்றுக் கொண்டிருந்த பாடசாலை மாணவிகள் மீது நடாத்தப்பட்ட சிறிலங்கா வான்படையின் மிலேச்சத்தனமான விமான தாக்குதலில் 53 மாணவிகள் உட்பட 56 பேர் கொல்லப்பட்டனர்.
17 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு

இந்தக் கொடூர இனவழிப்பு சம்பவத்தின் 17 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு பிரித்தானியாவில் உலகத் தமிழர் வரலாற்று மையத்தில் அமைந்துள்ள மாவீரர் மண்டபத்தில் இளையோரினால் முன்னெடுக்கப்பட்டது.
ஆரம்ப நிகழ்வாக துயிலுமில்ல வாயிலில் இருந்து சிறிலங்கா வான் படையால் கொல்லப்பட்ட 56 பேரின் திருவுருவப்படங்கள் அணிவகுப்பாக இளையோரினால் தாங்கிவரப்பட்டு, வளாகத்தில் அமைந்துள்ள பிரதான நினைவுத்தூவியின் முன் அணிவகுத்து நின்றனர்.
அவ்வேளை பொதுச் சுடர்களை மதகுரு, மற்றும் இளையோர்கள் ஏற்றி வைத்தனர்.
தொடர்ந்து பிரித்தானியாவின் தேசியக் கொடி, தமிழீழ தேசியக் கொடி ஆகியன ஏற்றி வைக்கப்பட்டது.
பின் திருவுருவப்படங்கள் பிரதான மண்டபத்துக்குள் எடுத்துச் செல்லப்பட்டு அங்கிருந்த படத்தாங்கிகளில் நிலைப்படுத்தப்பட்டன. அன்றைய நாளில் மாதாந்த நினைவு வணக்க நிகழ்வுடன் இணைந்ததாக இச்சிறப்பு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பொது மாவீரருக்கான ஈகைச்சுடர் ஏற்றி வைக்கப்பட்டதுடன், மலர் மாலையும் அணிவிக்கப்பட்டது.

அக வணக்கத்தினைத் தொடர்ந்து இம்மாதத்தில் வீரச்சாவினை தழுவிக் கொண்ட மாவீரர்களின் உரித்துடையோர் தமது உறவுகளின் திருவுருவப் படங்களுக்கு ஈகைச்சுடர் ஏற்றி மலர் வணக்கம் செய்தனர்.
தொடர்ந்து நிகழ்வுக்கு வருகை தந்த அனைத்து உறவுகளும், இனப்படுகொலையின் சாட்சிகளாக இருந்த பாடசாலை மாணவிகளின் திருவுருவப்படங்களுக்கும், இம்மாதத்தில் வீரச்சாவினை தழுவிக் கொண்ட மாவீரர்களின் திருவுருவ படங்களுக்கும், ஈகைச் சுடர்களை ஏற்றி மலர் வணக்கத்தினை செய்தனர்.
தடா சந்திரசேகரத்திற்கான நினைவு

இதேவேளை, தமிழ் மக்களின் விடுதலைக்காக தனது இறுதி மூச்சு வரை போராடியவரும், தேசியத் தலைவரினாலும், தமிழக மக்களாலும் தமிழீழ மக்களாலும் ஆழகமாக நேசிக்கப்பட்டவரும் 14 .08 2023 அன்று தமிழகத்தில் சாவடைந்தவருமான "தடா சந்திரசேகரம்" ஐயா அவர்களும் இன்றைய நாளில் நினைவு கூரப்பட்டார்.
தொடர்ந்து, இளையோர்களின் நினைவுரைகளும், கலை நிகழ்வுகளும் உணர்வு பூர்வமாக எழுச்சியுடன் நடைபெற்றது.
"எமக்கு நீதி கிடைக்கும் வரை தொடர்ந்து போராடுவோம்" எனும் மகுடவாக்கியத்துடன் இந்நிகழ்வு முன்னெடுக்கப்பட்டிருந்தது.








