சாணக்கியனை சீண்டும் இராஜாங்க அமைச்சர்! சபையில் விடுக்கப்பட்ட கோரிக்கை
தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியனிடம் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இடம்பெற்ற, சபை ஒத்திவைப்புப் பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில், தற்போதைய அரசாங்கம் 2021ஆம் ஆண்டு மற்றுமொரு தாக்குதலை நடத்துவதற்கு திட்டமிடுகின்றதா? என நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்தமை தொடர்பிலேயே வாக்குமூலம் பெறப்பட வேண்டும்.
இது, பாரதூரமானதொரு கருத்தாகும். அன்று ஈஸ்டர் தாக்குதலைத் தடுக்க முடியாத குழுவினர், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் சார்பில் முன்னிலையானவர்கள், அவர்களது அரசியல் நிலைப்பாடுகளுக்காக முன்னிலையானவர்கள், வேறாக ஈழத்தை கோரியவர்கள், இன்று 2021ஆம் ஆண்டு அரசாங்கம் மற்றுமொரு தாக்குதலை நடத்துவதற்கு திட்டமிடுகின்றதா? என கேள்வி எழுப்புகின்றனர்.
அன்று வேண்டுமென்றே மிலேச்சத்தனமான ஈஸ்டர் தாக்குதலை தடுக்கத் தவறியவர்கள், தற்போது மீண்டும் தாக்குதலை நடத்த முயற்சிக்கின்றார்களா? என்ற சந்தேகம் எழுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.