ஷிரந்தியை கைது செய்ய வேண்டாம்...! மல்வத்து மகா விகாரை அறிக்கை
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) மல்வத்து மகாநாயக்க தேரரிடம் விடுத்த கோரிக்கை தொடர்பில் உண்மைக்கு புறம்பான தகவல் பரப்புபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மல்வத்து மகா விகாரையின் பிரதி பதிவாளர் மஹாவெல ரத்தனபால தேரர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேவையற்ற பொது அமைதியின்மை
அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,"ஷிரந்தியை கைது செய்ய வேண்டாம் என்று அநுரவிடம் சொல்லுங்கள். மகிந்த மல்வத்து மகாநாயக்கரிடம் கோரிக்கை" என்ற தலைப்புடன் ஒரு தவறான செய்தி வெளியிடப்பட்டுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எந்த சந்திப்பும் அல்லது தொலைபேசி உரையாடலும் நடைபெறவில்லை.
இதுபோன்ற தவறான செய்திகளை உருவாக்கி பரப்புவதன் ஊடாக தேவையற்ற பொது அமைதியின்மையை உருவாக்க முயற்சிக்கும் தனிநபர்கள் மற்றும் அமைப்புகளுக்கு எதிராக எதிர்காலத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடுமையான குற்றச்சாட்டு
இதேவேளை, தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் மீது சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) கடுமையான குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்.
அதன்போது, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பெயரை தொடர்புபடுத்தி தவறான தகவல்கள் மூலம், அரசாங்கம் தனது தோல்விகளை மறைக்க முயற்சிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாமல் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் கணக்கில் வெளியிட்டுள்ள பதிவில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, தமது குடும்பத்தினரை கைது செய்யாது தடுக்கும் வகையில் மகாநாயக்க தேரர்களிடம் உதவி கோரியதாக வெளியான செய்தியை அரசியல் மயமான பொய்யான முயற்சி எனவும், முழுமையாக தவறானது என்றும் நாமல் ராஜபக்ச சுட்டிக்காட்டியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
