சிவபூமி சிங்கள பூமி ஆக்கப்படுகிறதா?
ஒரு இனத்தை அழிக்க வேண்டுமாக இருந்தால், அந்த இனத்தின் நிலத்தை ஆக்கிரமித்து அந் நிலத்தில் வேரோடியிருக்கும் பண்பாட்டுத் தடையங்களை அழித்துவிட வேண்டும் என்பதை ஆக்கிரமிப்பாளர்கள் எப்போதுமே நூதனமாகப் பின்பற்றுகிற விடயம். நிலத்தையும் பண்பாட்டையும் இழந்துவிட்டால் ஓர் இனம் வெகு காலத்திலேயே அழிந்துவிடும் என்பது அவர்களின் நம்பிக்கையும் திட்டமும்.
இப்படியான நிலையில் தான் ஈழத் தமிழ் மக்கள் இன்றைக்கு எதிர்கொண்டுள்ள நில ஆக்கிரமிப்புக்களும் பண்பாடு மீதான அழிப்புக்களும் ஒடுக்கப்பட்ட ஓர் இனம் மீதான பெரும் அபாயம் சூழ் கரங்களாக மாறியிருக்கின்றன.
அரசியல் தீர்மானம் அவசியம்

விடுதலைப் புலிகள் காலத்தில் பெளத்த மத வழிபாட்டுக்கு எவ்வித இடையூறும் இருந்ததில்லை எனவும் மாறாக பாதுகாப்பே இருந்தது என்றும் அதற்கு காரணம் விடுதலை புலிகள் நாங்கள் அணிந்திருந்த எங்கள் காவி உடைக்கு தந்த மரியாதை என்றும் வடக்கு, கிழக்கு மாகாண பிரதம சங்க நாயக்கர் சியம்பலாகஸ்வெவ விமலசாரநாயக்க தேரர் அண்மையில் கூறிய கருத்து பெரும் கவனத்திற்கு உரியதாக இருக்கிறது.
அத்துடன், குருந்தூர் மலை தொல்பொருள் திணைக்களத்துக்கு உரியது. இதனை தனி ஒரு மதம் மட்டும் தனக்கானது என உரிமை கொண்டாட கூடாது. சிங்கள பெளத்தர்கள் இங்கு வாழ்ந்தார்கள் என்பது முரணானது, ஆனால் இங்கு தமிழ் பெளத்தர்கள் இப்பகுதியில் வாழ்ந்துள்ளனர் என்பதுவே உண்மை.
தெற்கில் சம்பந்தமே இல்லாமல் சிங்கள பெளத்த கிராமத்துக்குள் கிறிஸ்தவ மதகுருவோ அல்லது சைவ பூசகரோ வந்து இது தங்கள் தளம் எனக்கூறி உரிமை கொண்டாடினால் சிங்கள பெளத்தர்கள் ஏற்றுக்கொள்வார்களா அல்லது விட்டுத்தான் கொடுப்பார்களா? என்றும் அவர் கேள்வி எழுப்பி இருந்தார்.

சிங்கள பௌத்த ஆக்கிரமிப்பு தொடர்பில் மிகக் கடும் போக்கான கருத்துக்கள் தென்னிலங்கையில் இருந்து வருகின்ற நிலையில், இதுபோன்ற கருத்துக்கள் ஓரளவு நம்பிக்கையையும் ஆறுதலையும் ஏற்படுத்துகின்றன. திருக்கோணேச்சரமும், நல்லூர் எங்களுடயவைதான் என்று எல்லாவல மேதானந்த தேரர் கூறுகின்ற நிலையில், சியம்பலாகஸ்வெவ விமலசாரநாயக்க தேரர் பௌத்த மத்தத்திற்கு விடுதலைப் புலிகள் அளித்த மரியாதையைப் பற்றி பேசியிருப்பது காலப் பொருத்தமான விடயம். பௌத்தத்தின் பெயரால் இத்தகைய ஆக்கிரமிப்புக்கள், அச்சுறுத்தல்கள் இன ரீதியான பாரிய ஒடுக்குமுறையின் பகிரங்க மிரட்டல்களாகவும் கிளம்பியுள்ள தருணத்தில் அரசியல் ரீதியான தீர்மானங்கள் அவசியமானது.
ஈழத்தை சிவபூமி என அழைத்த திருமூலர்

மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்தில் வாழ்ந்த திருமூலர் அவர்கள், ஈழத்தை சிவபூமி என்று அழைத்தார். அதற்கான காரணம் ஈழ நிலம் முழுவதும் சிவத் தலங்கள் நிறைந்து காணப்படுகின்றன. (முருகத் தலங்களும் ஈழத்தில் நிறைந்தே உள்ளன.) வடக்கில் நகுலேச்சரமும் திருக்கேதீச்சரமும் காணப்பட , கிழக்கில் திருக்கோணேச்சரமும் கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரமும் இருக்கின்றன. ஈழத்தின் நடுவே முன்னேச்சரம் அமைந்திருக்க , தெற்கில் தொண்டீச்சரம் தலம் அமைத்திருக்கப் பெற்றிருந்தது. இதைத் தவிரவும் ஈழ நிலமெங்கும் பல தொன்மையான சிவாலயங்கள் காணப்படுகின்றன.

திசையாவும் ஈச்சரங்கள் நிறைந்த ஈழத்தில் பஞ்ச ஈச்சரங்கள் பாடல் பெற்றுப் வரலாற்றுப் புகழ் கொண்டவை. தமிழ்நாட்டல் ஏழாம் நூற்றாண்டின் வாழ்ந்த நாயன்மார்களான சம்பந்தர் மற்றும் சுந்தரர் ஆகியோர் திருக்கேணச்சரம் மற்றும் திருக்கேதீச்சரம் மீது பதிகங்களைப் பாடியுள்ளனர். ஈழத்தின் தலங்களும் பதிகங்களும் நாயக்கர் காலத்தில் எழுந்த திருப்புகழ் போன்ற பக்திப் பாடல்களும் ஈழத்தின் தொன்மையின் சான்றாதாரங்களாக வராற்றில் நிலைத்திருக்கின்றன. ஆனால் இப்போது புதிய புதிய கதைகளைக்கூறி ஈழ நிலத்தையும் அதன் பண்பாட்டையும் பேரினவாதிகளும் அரசும் அதன் தொல்லியல் திணைக்களமும் கூறு போட முயல்வதே இங்கு அதிர்ச்சியானது.
தொல்லியல் திணைக்களத்தின் ஆக்கிரமிப்பு

இலங்கை அரசின் தொல்லியல் திணைக்களம் என்பது ஈழ மண்ணில் உள்ள தமிழ் அடையாளங்களையும் சைவ அடையாளங்களையும் அழித்து ஈழத்தை சிங்கள பூமியாக்க வேண்டும் என்று கங்கனம் கட்டி செயற்படுகிற ஓர் அரச திணைக்களம். இன்றைக்கு ஆயுதங்கள் இல்லாமல். சீருடை இல்லாமல் நிலங்களை அபகரிக்கின்ற ஆலயங்களை ஆக்கிரமிக்கின்ற போரை தொல்லியல் திணைக்களம் வழியாக இலங்கை அரசு மேற்கொள்கின்றது. ஒரு புறத்தில் ஈழத்தை இராணுவத்தினர் ஆக்கிரமிக்கின்றனர். இன்னொரு புறத்தில் சிங்கள மக்கள் ஈழ மண்ணில் வந்து குடியேறி ஆக்கிரமிக்கிறார்கள். இன்னொரு புறத்தில் தொல்லியல் திணைக்களம் ஆக்கிரைமிப்பை செய்கிறது.

ஈழ மக்கள் மும்முனைப் போரை எதிர்கொண்டிருக்கிறார்கள். தென்னிலங்கையில் இருக்கும் கதிர்காம் முருகன் ஆலயம், தமிழர்கள் வழிபட்ட தொன்மையான ஆலயம். இன்று அது முழுமையாக சிங்கள ஆலயமாக்கப்பட்டுள்ளது.
அதைப் போல தென்னிலங்கையில் மாத்தறை என்ற இடத்தில் தென்னாவரம் தொண்டீச்சரம் என்ற பழமையான சிவ ஆலயம் ஒன்று இருந்தது. மாத்தறை என்பதன் பூர்வீக தமிழ்ப் பெயர் மாதுறை. அங்கிருந்த சிவன் ஆலயம் அழிக்கப்பட்டு சிவலிங்கம் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. ‘தேவன்துறை கோயில்’, ‘நாக ரீச நிலாக் கோயில்’ என இந்த ஆலயம் அழைக்கப்பட்டது. இக்கோயிலில் உறையும் சிவபெருமான் தமது சிரசில் பிறை நிலவைச் சூடியிருப்பதனால் , அவர் ‘சந்திர மௌலீஸ்வரர்’ என்னும் திருப்பெயரைக் கொண்டவர். அதைப் போல கொழும்பில் இரத்மலானையில் இருந்த நந்தீச்சரமும் அழிக்கப்பட்டது. ஆலயங்கள் அழிக்கப்பட்ட நிலத்தின் வரலாறு நம் கண் முன்னே மாறி நாமே அறியாத வகையில் திரிக்கப்பட்டுள்ளது.
புலிகளற்ற நிலையில் தலையெடுக்கும் ஆக்கிரமிப்பு

ஈழத்தில் சம உரிமைகள் மறுக்கப்பட்ட தமது உரிமைகளை அகிம்சை வழியில் கேட்டனர். அதற்கு இனப்படுகொலைகள் தான் பதில்களாகக் கிடைத்தன. இதனால் அடக்கி ஒடுக்கப்பட்ட ஈழ மக்கள் தனிநாடு கோரிய போராட்டத்தை கையில் எடுத்தார்கள்.
நிலத்தை ஆக்கிரமித்தல் , மொழியை அழித்தல் , பண்பாட்டை அழித்தல் , கல்வி உரிமைகளை மறுத்தல் போன்ற இன மேலாதிக்கத்தாலும் பாரபட்சத்தாலும் ஈழ மக்கள் ஒடுக்கப்பட்டார்கள். அதற்காகவே தனிநாட்டுப் போரும் முகிழ்ந்தது. 2009 இல் தனிநாட்டுப் போராட்டத்தின் ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்ட நிலையில் , 2009 இற்குப் பின்னர் விடுதலைப் புலிகளற்ற நிலத்தில் மீண்டும் இலங்கை அரசு ஆக்கிரமிப்புக்களையும் ஒடுக்குமுறைகளையும் மிகக் கடுமையாக முடுக்கிவிட்டிருக்கிறது.
ஈழத் தமிழர் தாயகத்தில் வெடுக்குநாறி மலை , குருந்தூர் மலை , நிலாவரை , நாவற்குழி , மயிலிட்டி , மண்ணித்தலை , உருத்திரபுரம் , கச்சதீவு , கன்னியா வெந்நீரூற்று எனப் பல இடங்களில் ஆக்கிரமிப்பு முயற்சிகளை மேற்கொண்டுள்ள நிலையில் , இப்போது சுழிபுரம் பறாளாய் முருகன் ஆலயத்தையும் இலக்கு வைத்துள்ளது அரசு. இதேபோல குருந்தூர் மலையில் பொங்கல் வழிபாடு செய்யச் சென்ற தமிழ் மக்களுக்கு பெரும் அவமதிப்பு நிகழ்த்தப்பட்டது. சைவத் தமிழ் மரபில் பெண் தெய்வமாக வழிபடும் அடுப்பை காலணி அணிந்த கால்களால் மிதித்து அணைத்த நிகழ்வு தமிழ் மக்களின் நெஞ்சங்களில் தீயாய் சுட்டது.
தீர்வு பற்றி பேச்சு – ஆக்கிரமிப்பு முயற்சி

இலங்கையில் இப்போது அரசியல் தீர்வு முயற்சிகள் நடப்பதாக தோரணை காட்டப்படுகின்றது. 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தப் போகிறேன் என்று சர்வ கட்சிகளையும் தமிழ் கட்சிகளையும் சந்தித்து ‘தீர்வு தருகிறேன்’ என்றும் ‘தீர்வு தர மாட்டேன்’ என்றும் அரசியல் உரையாடல்கள் நடக்கும் சம நேரத்தில் தான் இதுபோன்ற ஆக்கிரமிப்புகளும் ஒடுக்குமுறைகளும் நடக்கின்றன.
நல்லிணக்க முயற்சிகள் நடக்கின்றன என்ற காட்சிகள் வெளியில் காட்டப்படும் சம நேரத்தில்தான் தமிழ் இனத்தை இன மேலாதிக்கத்தாலும் பாரபட்சத்தாலும் நோகடிக்கும் காட்சிகள் நிறைவேற்றப்படுகின்றன. ராஜபக்சவினரின் ஆதரவுடன் ஆட்சி நடத்தும் ரணில் விக்கிரமசிங்க அவர்களும், தமிழர் தேசத்தை சிங்கள பூமி ஆக்கிவிட்டு ஈழத் தமிழர்களை அழித்துவிடுவது தான் ஒரே தீர்வென்று செயற்படுகிறாரா?
எனவே, எம் நிலம் மீதான ஆக்கிரமிப்பை , பண்பாட்டழிப்பை தடுக்கும் அரசியல் தீர்மானங்களை அடைய ஈழத் தமிழர்கள் கடுமையாக உழைக்கவும் செயற்படவும் வேண்டியது அவசியமாகும்.