பிக்குவிற்கு எதிராக சிங்கள மக்கள் போராட்டம்!.. (படம்)
மட்டக்களப்பு - ஏறாவூர் - புன்னக்குடா பகுதியில் வசித்து வரும் சிங்கள மக்கள் தங்களது கிராமத்தில் இருக்கும் பிரதான பிக்குவை உடனடியாக நீக்குமாறு கோரி இன்று காலை ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுத்துள்ளதாக ஐ.பி.சி தமிழ் ஊடகத்தின் பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னதாக 11வயது மதிக்கத்தக்க, பிக்குவிடம் கற்பதற்காகச் சென்ற சிறுவன் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததன் அடிப்படையில் குறித்த பிரதான பிக்கு கைது செய்யப்பட்டு, அவருக்கு நீதிமன்றம் ஊடாக சிறைத் தண்டனையும் வழங்கப்பட்டது.
பிணை மனு அடிப்படையில் மீளவும் வெளியில் வந்த பிக்கு குறித்த விகாரையில் தொடர்ந்தும் இருப்பதனால், குறித்த பிக்குவை உடனடியாக நீக்குமாறு கோரியும் தங்களது மாணவர்களது சமய நடவடிக்கைகளுக்கு அனுப்புவதற்கு அச்சம் உள்ளதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.
இதன்போது அரச தலைவர் மற்றும் பிரதமர் உடனடியாக கவனம் எடுத்து பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்ட பிக்குவால் தங்களது சிங்கள இனத்துக்கு ஏற்பட்ட அபகீர்த்தி காரணமாக உடனடியாக இவர் போன்ற ஒரு துறவியை தங்களது விகாரையில் அனுமதிக்க வேண்டாம் எனவும் வலியுறுத்தி உள்ளமை குறிப்பிடத்தக்கது.