காலி முகத்திடல் தாக்குதல் - ஆறு எம்.பிக்கள் தொடர்பில் காவல்துறை எடுக்கவுள்ள நடவடிக்கை
அலரி மாளிகைக்கு முன்பாகவும் காலி முகத்திடலிலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நாளையதினம் (18) நாடாளுமன்றத்தில் பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 6 பேரிடம் வாக்குமூலம் பெற உள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, பவித்ரா வன்னியாராச்சி, சஞ்சீவ எதிரிமான்ன, ரோஹித அபேகுணவர்தன, சிபி ரத்நாயக்க மற்றும் இந்திக அனுருத்த ஆகியோரிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் வாக்குமூலம் பெற உள்ளனர்.
குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளின் ஐந்து குழுக்கள் இன்று (17) நாடாளுமன்றத்திற்குச் சென்று வாக்குமூலங்களைப் பெறுவதற்குச் முயன்ற போதிலும் நாளையதினம் (18) வாக்குமூலங்களைப் பெறுவதற்கு அவர்கள் இணங்கியுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான தாக்குதலுக்கு போதிய ஆதாரங்கள் இருந்தால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 22 சந்தேக நபர்களை கைது செய்யுமாறு சட்டமா அதிபர் நேற்று (ஜன. 16) காவல்துறை மா அதிபர் மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு எழுத்து மூலம் பணிப்புரை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இன்றையதினம் பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.