சிறிலங்கா கிரிக்கெட்டின் ஹன்சார்ட் அறிக்கை - நாடாளுமன்றில் எடுக்கப்பட்ட முடிவு
கிரிக்கெட்டுக்கான புதிய சட்டமூலத்தை தயாரித்து, நாடாளுமன்றில் சமர்ப்பித்து, உடனடியாக அதனை நிறைவேற்றுவதற்கான சகல நடவடிக்கைகளையும் எடுக்கவுள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தம்மிடம் அறிவித்தாக விளையாட்டுத் துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
2022 உலகக் கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் போது சிறிலங்கா கிரிக்கெட் நிறுவனம் முன்னெடுத்த செலவுகள் தொடர்பான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை மீதான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் நேற்று(24) கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சிறிலங்கா கிரிக்கெட்டில் மோசடிகள்

அத்துடன், சிறிலங்கா கிரிக்கெட் நிறுவனம் தொடர்பான விவாதத்தின் ஹன்சார்ட் அறிக்கை சர்வதேச சங்கங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர், ஹேஷா விதானகே இந்த விவாதத்தை அண்மையில் கோரியிருந்த நிலையில், நேற்று குறித்த விவாதம், இடம்பெற்றது.
இதன்போது, சிறிலங்கா கிரிக்கெட்டில் மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக வெளியான கணக்காளர் நாயகத்தின் அறிக்கை தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, சிறிலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர்கள், உடனடியாக மாற்றப்பட வேண்டும் எனவும் நாடாளுமன்றில் பல்வேறு தரப்பினரால் வலியுறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.