போதைப்பொருள் விநியோகத்தின் பின்னாலுள்ள அரசியல் சக்திகள் : தமிழ் எம்.பி பகிரங்கம்
கடந்த காலங்களில் இருந்த ஜனாதிபதியின் மகன் போன்றவர்களும் போதைப்பொருளோடு சம்பந்தப்பட்டிருக்கின்றார்கள் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் (Gnanamuththu Srinesan) தெரிவித்துள்ளார்.
அதேபோன்று கம்பஹா மாவட்டத்தில் ஒரு முக்கியமான ஒரு அரசியல் சக்தியாக இருக்கின்றவரும் சம்பந்தப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
மட்டக்களப்பில் நேற்று (07) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
சட்டவிரோதமான போதைப் பொருள்
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், “சட்டவிரோதமான போதைப் பொருள் தொழிற்சாலை இலங்கையில் இயங்கி வருகின்றது என்றால் அதற்கு நிச்சயமாக அதனை பாதுகாப்பதற்குரிய பெரிய அரசியல் சக்திகள் இருந்திருக்க வேண்டும். காவல்துறை சக்திகளும் இருந்திருக்க வேண்டும்.
கைது செய்யப்பட்டவர்களை முறையாக விசாரிக்கப்படுகின்ற போது அவர்களுடைய இயக்குநர்கள் யார் பணிப்பாளர்கள் யார் இதனை நாட்டுக்குள் கொண்டு வருவதற்கு எப்படியான மர்மமான திட்டங்கள் கையாளப்பட்டிருந்தன என்ற உண்மைகளை கண்டறிய முடியும்.
குறிப்பாக வடக்கு கிழக்கில் பலவிதமான போதைப் பொருள் பாவனைகள் யுத்தத்தின் பின்னர் பிரயோகிக்கப்பட்டிருக்கின்றன.
ஒருவர் கேரளா கஞ்சாவுடன் பிடிபட்டிருக்கின்றார் பின்னர் அரசியல் செல்வாக்கின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டு இருக்கின்றார். இப்போது மீண்டும் அவர் கைது செய்யப்பட்டு இருக்கின்றார்.
சட்டத்தின் முன் நிறுத்தப்படல்
எனவே பொதுவாக நோக்குகின்ற போது போதைப் பொருளால் நாட்டையும் மக்களையும் குறிப்பாக வடக்கு கிழக்கு தமிழ் பேசுகின்ற மக்களையும் சீரழிக்கின்ற கலாசார படுகொலை செய்கின்ற இனப்படுகொலையின் ஒரு வடிவமாகதான் இதுவும் இருக்கின்றன.
முக்கியமான சூத்திரதாரிகளை வைத்து விட்டு அவர்களுடைய கருவிகளை பிடிப்பதான் மூலமாக இந்த போதைவஸ்து வியாபாரத்தை துஷ்பிரயோக நடவடிக்கையை கட்டுப்படுத்த முடியாது.
எனவேதான் கிளீன் சிறிலங்கா திட்டத்தின் கீழ் போதை வஸ்து என்பது நாட்டிலிருந்து துடைத்தெறியப்பட வேண்டும் இதன் சூத்திரதாரிகளாக இருக்கின்றவர்களை சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.” என தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
