கடற்றொழிலாளர் மீது துப்பாக்கிச்சூடு : கடற்படையினருக்கு சந்திரசேகர் பணிப்புரை
திருகோணமலை (Trincomalee) - குச்சவெளி சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணைகளை முன்னெடுத்து கூடியவிரைவில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு கடற்படையினருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரனால் (Ramalingam Chandrasekar) குறித்த பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
மேற்படி அறிக்கையை அடிப்படையாகக்கொண்டே சம்பவம் தொடர்பில் முடிவொன்றுக்கு வரமுடியும் எனவும், அடுத்தகட்ட நடவடிக்கையை முன்னெடுக்க முடியும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
கடற்படையினர் துப்பாக்கிச்சூடு
திருகோணமலை, குச்சவெளி கடற்பரப்பில் நேற்று (03.06.2025) சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டார் எனக் கூறப்படும் கடற்றொழிலாளர் மீது கடற்படையினர் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
இது தொடர்பில் அமைச்சரின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ள நிலையிலேயே சம்பவம் தொடர்பில் அமைச்சர் அறிக்கை கோரியுள்ளார்.
இது குறித்து கருத்து வெளியிட்ட அமைச்சர் சந்திரசேகர், ”சட்டவிரோத மீன்பிடி முறையானது கடலுக்கும், நாட்டுக்கும் கேடு விளைவிக்கும்.
சட்டவிரோத மீன்பிடி
ஒரு சில கடற்றொழிலாளர்களின் வருமானத்துக்காக பெரும்பாலானவர்களின் வருமானம் இழக்கப்படுகின்றது. அதனால்தான் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையை தடுக்குமாறு கடற்படையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திருகோணமலை சம்பவம்கூட, சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையால் ஏற்பட்டதெனக் கூறப்படுகின்றது. விசாரணைகளின் பின்னரே உண்மை என்னவென்பது தெரியவரும்.
சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையும் தவறு, துப்பாக்கிச்சூடு நடத்துவதும் தவறு, அதற்கு ஏதுவான சூழ்நிலையை உருவாக்குவதும் தவறு. எனவே, அறிக்கை கிடைத்த பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்." என தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
