ஈழத் தமிழர்களுக்கு தனித் தமிழீழம் வேண்டும்.... இந்தியாவின் ஆதரவுடன் இனப்படுகொலை : வன்னி அரசு பகிரங்கம்
ஈழத் தமிழர்களுக்கு தனித் தமிழீழம் வேண்டும் என்பதே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கோரிக்கையாக இருப்பதுடன் இரண்டு தேசிய இனங்கள் இணைந்து செயற்பட முடியாது என்பதே எமது நிலைப்பாடாக இருக்கும் நிலையில் குறுகிய காலத்தில் இதற்கான ஒரு தீர்மானத்தை நிறைவேற்றுவோம் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சட்ட மன்ற உறுப்பினர் வன்னி அரசு தெரிவித்துள்ளார்.
ஐபிசி தமிழின் களம் நிகழச்சியில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்
அவர் மேலும் தெரிவிக்கையில், 2009 இல் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை உலகளவில் எடுத்துச்சொல்ல வேண்டிய சூழலில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் இது குறித்து பேச வேண்டும் என எமது கட்சித் தலைவர் வழிகாட்டியிருந்தார்.
இந்தநிலையில் முதலமைச்சர் விஜயும் இந்தப் பிரச்சினையை செவிசாய்த்து கேட்கக்கூடிய இடத்தில் இருப்பதால் இந்த சூழலில் தனித்தமிழீழ கோரிக்கையை முன்வைப்பது பொருத்தமானது என்ற அடிப்படையிலே சட்டமன்றத்தில் இது குறித்து பேசினேன்.
சிங்கள பௌத்த பேரினவாதத்தின் ராஜபக்ச சகோதரர்களால் இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட இனப்படுகொலைக்கு உலக நாடுகள் ஆதரவளித்த நிலையில் இந்தியாவும் ஆதரவளித்ததுடன் இந்தியாவின் துரோகத்தின் அடிப்படையிலே இந்த இனப்படுகொலை நடைபெற்றது என்பதை சட்டப்பேரவையில் தெளிவுபடுத்தினேன்.” என தெரிவித்தார்.
தமிழக சட்ட மன்றத்தில் முதலமைச்சர் விஜய் முன்னிலையில் ஈழத்தமிழர்களுக்காக வன்னியரசு குரல் கொடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |