தேர்தலுக்கு அஞ்சும் மொட்டு கட்சி : கேலிக்கையாக தெரிவித்துள்ள ரணில் தரப்பு
சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து பணியாற்ற முடியாத பட்சத்தில், நாடாளுமன்ற தேர்தலொன்றுக்கு செல்வதற்கான நடவடிக்கைகளை பொதுஜன பெரமுனவினால் மேற்கொள்ள முடியுமென ரணில் ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லன்சா தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா அமைச்சரவையின் மறுசீரமைப்பு தொடர்பில் ரணில் விக்ரமசிங்க மீது அதிருப்தியை வெளியிட்டுள்ள போதிலும் அவருக்கான ஆதரவை விளக்கிக் கொள்வது தொடர்பான தீர்க்கமான முடிவொன்றை மொட்டு கட்சி இதுவரை அறிவிக்காத பின்னணியிலேயே, அவர் இதனை தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா அமைச்சரவையில் அண்மையில் ரணில் விக்ரமசிங்க மேற்கொண்ட மாற்றங்கள் தொடர்பில் பொதுஜன பெரமுனவினர் விமர்சனங்களை முன்வைத்து வருவதாக நிமல் லன்சா சுட்டிக்காட்டியுள்ளார்.
பொதுஜன பெரமுனவின் அதிருப்தி
எனினும், தமது கட்சி உறுப்பினர்களின் பதவிகளை மாற்றியமை தொடர்பில் பொதுஜன பெரமுனவினருக்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லையெனவும் அவர்களை விட ஏனைய கட்சி உறுப்பினர்களுக்கு அதிகளவான அமைச்சு பதவிகள் வழங்கப்பட்டமை அவர்களுக்கு பிரச்சனையாக காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதுவே சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் முன்வைத்த பாரிய குற்றச்சாட்டு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சாகர காரியவசம் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்களை அவருக்கு நேரடியாக சிறிலங்கா அதிபரிடமே முன்வைக்க முடியுமென நிமல் லன்சா கூறியுள்ளார்.
அத்துடன், ரணில் விக்ரமசிங்கவுக்கு தமது கட்சி ஆதரவளிக்காது என்பதையும் மொட்டு கட்சிக்கு நேரடியாக தெரிவிக்க முடியுமென அவர் தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை மாற்றங்கள்
சிறிலங்காவின் முன்னாள் அதிபர் கோட்டபய ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் பல தடவைகள் அமைச்சரவை மாற்றங்கள் இடம்பெற்றிருந்தாலும் குறித்த காலப்பகுதியில் யாரும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலையில், சிறிலங்கா அதிபராக ரணில் விக்ரமசிங்க அமைச்சரவை தொடர்பில் மேற்கொண்ட தீர்மானங்கள் முற்றிலும் சரியானவை என நிமல் லன்சா தெரிவித்துள்ளார்.
அத்துடன், எதிர்காலத்தில் தனியார் மயப்படுத்தப்படவுள்ள நிறுவனங்களை சிறிலங்கா நிதி அமைச்சின் கீழ் கொண்டு வருவதற்கு ரணில் விக்ரமசிங்க மேற்கொண்ட தீர்மானமும் சரியானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தலுக்கு அஞ்சும் பொதுஜன பெரமுன
இதேவேளை, அடுத்த மாதம் சமர்ப்பிக்கப்படவுள்ள 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை தோற்கடிப்பதன் மூலம் நாடாளுமன்ற தேர்தலை நடத்த முடியுமெனவும் அவர் கூறியுள்ளார்.

எனினும், இதனை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினர் செய்யமாட்டார்கள் எனவும் அவர்கள் தேர்தலுக்கு அஞ்சுவதாகவும் நிமல் லன்சா தெரிவித்துள்ளார்.
அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு
5 நாட்கள் முன்