ஈஸ்டர் தாக்குதலுடன் வெளிவந்த சோனிக்.. சோனிக்.. என்ற ஒரு பெயர்
2019 ஏப்ரல் 21ஆம் திகதி இலங்கையில் நடந்த ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்புகள், 269 உயிர்களைப் பலிகொண்ட ஒரு பயங்கரவாதத் தாக்குதலாகும்.
தேசிய தௌஹீத் ஜமாஅத் (NTJ) தலைவரான எம்.எச்.எம். சஹ்ரான் ஹாஷிம் தலைமையிலான இந்தத் தாக்குதல்கள், தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்களை இலக்காகக் கொண்டவை.
இந்த சம்பவத்தைச் சுற்றி பரவிய தவறான தகவல்கள், உளவுத்துறை தோல்விகள் மற்றும் சதிக் கோட்பாடுகள், இலங்கையின் பாதுகாப்பு அமைப்புகளின் நம்பகத்தன்மையை கேள்வி எழுப்பியுள்ளன.
குறிப்பாக, 'சோனிக்-சோனிக்' என்ற ரகசிய கருத்து குறித்து, உளவுத்துறை அதிகாரிகளின் பங்கு, மற்றும் குற்றப் புலனாய்வுத் துறை (CID) முன்னாள் இயக்குநர் ஷானி அபேசேகரவின் வெளிப்பாடுகள், இந்த விவகாரத்தின் சிக்கல்களை வெளிச்சம்போட்டுக் காட்டுகின்றன.
சோனிக் சோனிக் ... யார்
இக்கட்டுரை, இந்தத் தகவல்களைத் தொகுத்து, உண்மைகளை அலசுகிறது.'

ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பாக "சோனிக் சோனிக் ... யார்" என்ற கேள்வி மிகவும் பிரபலமான சர்ச்சைக்குரிய விடயம்.
"சோனிக் சோனிக்" (Sonic Sonic) என்பது 2019 ஈஸ்டர் தாக்குதல்களை நடத்திய சூத்திரதாரிகள் தங்கள் தொடர்பாடல் உரையாடல்களில் பயன்படுத்திய குறியீட்டுப் பெயர்.
இது யாரைக் குறிக்கிறது என்பது பல ஆண்டுகளாக பெரிய விவாதமாக இருந்து வந்தது.
தாக்குதலுக்குப் பிறகு விசாரணைகளில் இந்தப் பெயர் தெரியவந்தது.
சூத்திரதாரிகளின் உரையாடல்களில் "Sonic Sonic" என்று அடிக்கடி குறிப்பிடப்பட்டது. இலங்கை உளவுத்துறை (State Intelligence Service - SIS) தரப்பில், இது ஒரு undercover operative (மறைமுக உளவாளி) என்று விளக்கப்பட்டது.
இறுதியாக குறித்த குழுவுக்குள் ஊடுருவி இருந்த இலங்கை உளவுத்துறை அதிகாரி ஒருவரின் குறியீட்டுப் பெயர் இது என குறிப்பிடப்பட்டது.
குறிப்பாக ரொஹான் குணரத்ன போன்றவர்கள் இதை வெளியிட்டுள்ளனர்.
சஹ்ரான் குழு பல ஆண்டுகளாக உளவுத்துறை கண்காணிப்பில் இருந்தது, Sonic Sonic என்பவர் அவர்களுக்குள் ஊடுருவியவர். ஆனால் சில எதிர்க்கட்சியினர், சர்ச்சைக்குரிய அரசியல்வாதிகள், Channel 4 ஆவணப்படம் போன்றவை இதை மிகப் பெரிய சதியுடன் இணைத்து பேசியதாக குறிப்பிடப்படுகிறது.
எனினும் "Sonic Sonic" என்பவர் தாக்குதலை திட்டமிட்டவர்களுடன் தொடர்புடையவர் என்று குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டன.
கர்தினால் மெல்கம் ரஞ்சித் உட்பட சிலர் இதை விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
2023-2025 காலகட்டத்தில் CID விசாரணைகள், அரசியல் மாற்றங்கள் காரணமாக இந்தப் பெயர் மீண்டும் விவாதத்துக்கு வந்தது.
சிலர் இதை மறைத்து வைத்திருப்பதாக கூறினர். சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால்:"சோனிக் சோனிக்" இலங்கை உளவுத்துறையின் மறை உளவாளி (infiltrator) என்று அதிகாரப்பூர்வ தரப்பு கூறுகிறது.
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்களுடன் தொடர்புடைய குறியீட்டுப் பெயரிடப்பட்ட உளவுத்துறை சேகரிப்பு இருப்பதை இலங்கையின் அப்போதைய பதில் பாதுகாப்பு அமைச்சர் பிரேமித பண்டார தென்னகோன் முதல் முறையாக உறுதிப்படுத்தினார்(21-09-2023 )
சோனிக் ஒரு புலனாய்வு அதிகாரி என்றும், அவர்தான் சஹாரான் ஹாஷிமின் பயங்கரவாதப் பிரிவுக்குள் பதுங்கிச் சென்று தகவல்களைப் பெற்ற நபர் என்றும் கூறினார்.
அரச தரப்பு கருத்துக்கள்
'சோனிக்-சோனிக்' என்பது இலங்கை மாநில புலனாய்வு சேவை (SIS) தொடங்கிய ஒரு அசாதாரண ரகசிய நடவடிக்கையாகும்.

இது சஹ்ரான் தொடர்புடைய பயங்கரவாத வலையமைப்பை அகற்றுவதை நோக்கமாகக் கொண்டது.
தாக்குதலுக்கு ஐந்து மாதங்களுக்குப் பிறகு, நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஒரு அறிக்கையின் மூலம் இது வெளிப்பட்டது.
இந்த நடவடிக்கையின் மையத்தில் இருந்தவர், SIS இன் காவல்துறை ஆய்வாளர் செனரத் பண்டார.
அவர் 'சோனிக்-சோனிக்' என்ற புனைப்பெயரில் பயங்கரவாதக் குழுவுக்குள் ஊடுருவி உளவுத்தகவல்களைச் சேகரித்தார் என அப்போதைய அரசாங்க தரப்பு அறிக்கை வழங்கியது.
சர்வதேச பாதுகாப்பு ஆலோசகர் ரோஹன் குணரத்ன, சோனிக்-சோனிக் சஹ்ரானுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட உளவுத்துறை அதிகாரி என்று வெளிப்படுத்தினார்.
இந்த நடவடிக்கை, ஒரு வெளிநாட்டு உளவுத்துறை அமைப்பின் மத்திய கிழக்கு நிலையத்திலிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் தொடங்கப்பட்டது என சுட்டிக்காட்டப்பட்டது.
சோனிக்-சோனிக் நான்கு மாதங்கள் அர்ப்பணிப்புடன் பணியாற்றி, முக்கிய உளவுத்தகவல்களைச் சேகரித்தார் என்றும் இருப்பினும், சதிக் கோட்பாட்டாளர்கள் இதைத் திரித்து, உளவுத்துறையை அவதூறு செய்துள்ளனர் என்றும் விவரிக்கப்பட்டன.
பொதுவாக, அரசுகள் இத்தகைய ரகசிய நடவடிக்கைகளை வெளியிடுவதில்லை, ஏனெனில் அது உளவுத்துறை அதிகாரிகளின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும்.
இந்த தாக்குதலுக்கு இஸ்லாமிய அரசு (IS) பொறுப்பேற்கவில்லை என்ற போதிலும், உளவுத்துறை அதிகாரிகள் IS தொடர்பை ஒருபோதும் உறுதிப்படுத்தவில்லை.
இவ்வாறான பின்னணியில் முன்னாள் CID இயக்குநர் ஷானி அபேசேகர, 2020 இல் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த 36 பக்க மனு, ஈஸ்டர் குண்டுவெடிப்புகளுக்கு முன் NTJ மற்றும் சஹ்ரான் மீதான விசாரணைகளில் ஏற்பட்ட இடையூறுகளை வெளிப்படுத்தியது.
இது அரசியல் சதிகள் மற்றும் உளவுத்துறை தலையீடுகளை அம்பலப்படுத்தியது.
ஷானி அபேசேகரவின் அறிக்கை
அபேசேகர, தன்னை பொய்யான குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்ய முயல்வதாகக் கூறினார், இது பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) துஷ்பிரயோகமாகும் என்றார்.

அவரது விசாரணைகள், லசந்த விக்ரமதுங்க கொலை மற்றும் பிரகீத் எக்னெலிகொட காணாமல் போதல் போன்ற வழக்குகளில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஈடுபாட்டை வெளிப்படுத்தியதால், பழிவாங்கல் நோக்கம் இருப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.
மனுவில் விவரிக்கப்பட்ட முக்கிய வெளிப்பாடுகள்:
I. தோல்வியடைந்த தாஜ் குண்டுதாரி ஜமீல் மற்றும் இராணுவ உளவுத்துறை:
தெஹிவளை மோட்டலில் தோல்வியுற்ற குண்டுதாரி ஜமீல், இராணுவ புலனாய்வு (DMI) அதிகாரிகளுடன் தொடர்பில் இருந்தார். DMI ஜமீலின் இருப்பிடத்தை அறிந்திருந்தும், CID-க்கு தகவல் பகிரவில்லை.
இது சஹ்ரானை கைது செய்வதைத் தடுத்தது.
II. சோனிக்-சோனிக் மற்றும் SIS இணைப்பு:
மாத்தளை 'பொடி சஹ்ரான்' என்பவரின் சிம் அட்டை விசாரணை, சோனிக்-சோனிக் SIS இன் சப் இன்ஸ்பெக்டர் பண்டாராவுடன் தொடர்புடையது என்பதை வெளிப்படுத்தியது.
பண்டாரா, பொடி சஹ்ரானுடன் தொடர்பு கொண்டிருந்தார்.
ஆனால் DIG சம்பத் லியனகே, இது ரகசிய நடவடிக்கை என்று கூறி விசாரணையை நிறுத்தினார்.
III. வவுணதீவு காவல்துறை கொலைகள்:
2018 இல் மட்டக்களப்பில் இரண்டு காவல்துறை அதிகாரிகள் கொலை செய்யப்பட்ட வழக்கில், முன்னாள் விடுதலைப்புலிகள் உறுப்பினர்கள் பொய்யாக சிக்க வைக்கப்பட்டனர்.
உண்மையில், NTJ பொறுப்பு. DMI மற்றும் SIS ஆதாரங்களைத் திரித்து, விசாரணையைத் திசைதிருப்பின.
.IV. சஹ்ரானுடன் நேரடி தொடர்புடைய புலனாய்வு அதிகாரி:
FBI உதவியுடன் கண்டுபிடிக்கப்பட்ட IP முகவரி, சஹ்ரானுடன் தொடர்புடைய ஒரு நபரை சுட்டிக்காட்டியது. ஆனால் DMI இயக்குநர் பிரிகேடியர் சூல கொடித்துவக்கு, இது இரகசிய நடவடிக்கை என்று கூறி, CID விசாரணையைத் தடுத்தார்.
இவை ஷானியின் அறிக்கையினுடைய வெளிப்பாடுகள்.
இந்த வெளிப்பாடுகள், SIS மற்றும் DMI இன் தலையீடுகளை வெளிப்படுத்தின, இது கோட்டாபய ராஜபக்ச ஆட்சியின் கீழ் பழிவாங்கல் என்று ஷானிஅபேசேகர குற்றம் சாட்டினார்.
கத்தோலிக்க திருச்சபை
இதனடிப்படையில் இலங்கை கத்தோலிக்க திருச்சபையயும், தாக்குதல்களுக்குப் பின்னால் அரசியல் கை இருப்பதாக சந்தேகித்தது.
கார்டினல் மால்கம் ரஞ்சித், அரசாங்கத்தின் அலட்சியத்தை விமர்சித்து, சுதந்திர தின நிகழ்வுகளைப் புறக்கணித்தார்.
அப்போதைய(2024க்கு முன்னர்) எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஹரின் பெர்னாண்டோ, மனுஷ நாணயக்கார, அநுர குமார திசாநாயக்க, தாக்குதல்களில் உளவுத்துறை தொடர்பை வெளிப்படுத்தினர்.
FBI இடைமறிப்புகளில், குண்டுவீச்சுக்காரர்கள் 'சோனிக்-சோனிக்' மற்றும் 'பாஸ்' என்று குறிப்பிட்டனர்.
'அபு ஹிந்த்' ஒரு சர்வதேச உளவுத்துறை புனைப்பெயராக இருந்தது. மலேசியாவில் உள்ள இலங்கை புலனாய்வுப் பணியாளர்களுக்கும் சஹ்ரான் வலையமைப்புக்கும் தொடர்பு இருந்தது.
SIS தலைவர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே, விசாரணையில் தலையிட்டதாக குற்றம் சாட்டப்பட்தோடு, ஜனாதிபதி ஆணைக்குழு (ஜனக் டி சில்வா தலைமை), முக்கிய சாட்சியங்களை (சஹ்ரான் மனைவி, மாத்தளை சஹ்ரான்) புறக்கணித்தது என்றும் தெரிவிக்கப்பட்டது.
ஒரு பக்கம் 'சோனிக்-சோனிக்' போன்ற நடவடிக்கைகள் பயங்கரவாதத்தைத் தடுக்க முயன்றாலும், அரசியல் தலையீடுகள் மற்றும் இடையூறுகள் அவற்றைத் தடுத்தன என கூறப்பட்டன.
மேலும் ஷானி அபேசேகரவின் மனு மற்றும் எதிர்க்கட்சி வெளிப்பாடுகள், உண்மையான குற்றவாளிகளை மறைக்கும் சதிகளை அம்பலப்படுத்தியதாக கருதப்பட்டது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |