தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் வைக்கோல் பட்டறை நாய் மாதிரி - ஊடகங்கள் மத்தியில் டக்ளஸ்!
தமிழ் பேசும் மக்களின் தேசிய தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம், எம்.எச்.எம். அஷ்ரப் மற்றும் சௌமியமூர்த்தி தொண்டமான் ஆகியோரே எனவும், இம்மூவரையும் தான் நான் தமிழ் பேசும் மக்களின் தேசிய தலைவர்களாக கருதுகின்றேன் என கடற்றொழில் வள அமைச்சர் கே.என். டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
அம்பாறை மாவட்டம் ஒலுவில் துறைமுகத்தை அபிவிருத்தி செய்து மக்கள் பாவனைக்கு உட்படுத்துவது தொடர்பில் குறித்த துறைமுகத்தை பார்வையிடச் சென்றிருந்தார். அதன் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
இவர்களே தேசியத் தலைவர்கள்
பலரும் பலதை கதைக்கலாம். எனக்கு அதை பற்றி அக்கறை இல்லை. முன்னர் ஒரு தேசிய தலைவர் ஒருவர் இருந்தவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம். வடகிழக்கு உட்பட மலையகத்திலும் 3 தேசிய தலைவர்கள் இருந்தனர்.
இது நான் சொல்கின்ற தேசிய தலைவர்கள். வேறு நபர்கள் வேறு விதமாக கூறலாம். அந்த வகையில், தமிழ் பேசும் மக்களின் முதலாவது தேசிய தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம், இரண்டாவது எம்.எச்.எம். அஷ்ரப் மற்றும் மூன்றாவது சௌமியமூர்த்தி தொண்டமான் ஆகியோரே உள்ளனர்.
இம்மூவரையும் தான் நான் தமிழ் பேசும் மக்களின் தேசிய தலைவராக கருதுகின்றேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஒலுவில் துறைமுக அபிவிருத்தி
மேலும் ஒலுவில் துறைமுகத்தை அபிவிருத்தி செய்து மக்கள் பாவனைக்கு உட்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. மக்களின் வாழ்வாதாரத்தை வளப்படுத்தி கட்டியெழுப்புவதற்கு பல வேலைத்திட்டங்கள் உள்ளன.
ஆகவே இந்த மாவட்டத்தின் மக்களுக்கு தான் முன்னுரிமை வழங்கப்படும். தமிழ் தேசிய கூட்டமைப்பினர் வைக்கோல் பட்டறை நாய் மாதிரி, அதாவது தாங்களும் செய்ய மாட்டார்கள். செய்பவர்களையும் விட மாட்டார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
ஒரு வர்த்தக கப்பல் கூட வராத துறைமுகம்
கடந்த 2008ஆம் ஆண்டில் நிர்மாணப்பணிகள் ஆரம்பிக்கப்பட்ட ஒலுவில் மீன்பிடித் துறைமுகம் 2013 ஆம் ஆண்டு அப்போதைய அரச தலைவரும், துறைமுக அமைச்சருமான மகிந்த ராஜபக்சவால் திறந்து வைக்கப்பட்டது.
2013ஆம் ஆண்டு திறந்துவைக்கப்பட்ட போதிலும், ஒரு வர்த்தக கப்பல் கூட ஒலுவில் துறைமுகத்துக்கு இதுவரை வரவே இல்லை. ஏனெனில் மணல் நிரம்புவதால் இதுவரை எவ்வித பயனையும் பெற்றுக்கொள்ள முடியாதுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வீணான அரசியலின்றி ஒத்துழைப்பு அவசியம்
இதன் பிரகாரம் ஒலுவில் மீன்பிடி துறைமுகத்தின் செயற்பாடுகளை சம்பிரதாயபூர்வமாக மீள ஆரம்பிப்பதற்கும் குறித்த துறைமுகத்திற்கு மறைந்த முன்னாள் அமைச்சர் எம்.எச்.எம் அஸ்ரப்பின் பெயரினை வைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக குறிப்பிட்டார்.
எனவே இவ்விடயத்தில் வீணான அரசியல் செய்யாமல் அனைத்து தரப்பினரும் முன்வந்து ஒத்துழைப்புகளை வழங்க வேண்டு என கேட்டுக்கொண்டார். இதன் போது துறைசார் அதிகாரிகள் மீனவ சமூகத்தை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.
மீன் பதனிடும் தொழிற்சாலை கையளிப்பு
கடந்த கால விஜயத்தின் போது முதல் கட்டமாக மீன் பதனிடும் தொழில் கூடங்கள் போன்றவை நிர்மாணிக்கப்பட்டு செயற்படுத்தப்ட்ட நிலையில் மீனவ சமூகத்தின் பாவனைக்கு அமைச்சரால் கையளிக்கப்பட்டுள்ளன.
பல மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட துறைமுகத்தை பராமரிப்பதற்கு துறைமுக அபிவிருத்தி அதிகார சபை மாதாந்தம் 56 இலட்சம் ரூபாய் வரை செலவிட நேர்ந்தது எனவும் தெரிவித்துள்ளார்.