இலங்கையின் எரிபொருள் கொள்வனவு தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்
இலங்கை ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய்க்கு 286 டொலர் வரை செலுத்தியுள்ளதாகவும் இது உலகளாவிய சந்தை விலையை விட மிக அதிகமாக இருப்பதாகவும் முன்னணி சர்வதேச வங்கியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஹொங்கொங்கில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் உரையாற்றிய சர்வதேச வங்கியொன்றின் தலைமை நிர்வாக அதிகாரி இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
தற்போது ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் போர் காரணமாக விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளே இதற்கு முக்கியக் காரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆசிய நாடுகளின் நிலை
மேற்கத்திய சந்தைகளில் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய் 100 முதல் 110 டொலர் வரை மட்டுமே உள்ளதாகச் செய்திகள் வந்தாலும், ஆசிய நாடுகளின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

சரக்குக் கப்பல் போக்குவரத்து பாதிப்பு, காப்பீட்டுத் தொகை பன்மடங்கு உயர்வு மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு போன்ற காரணங்களால் ஆசிய நாடுகள் இத்தகைய கடுமையான விலை உயர்வினைச் சந்தித்து வருகின்றன.
இது இலங்கைப் பொருளாதாரத்தில் மீண்டும் ஒரு பெரும் சவாலை ஏற்படுத்தக்கூடும் என அஞ்சப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |